600 பேர் பலியான ஈக்வடார் பூகம்பம்... 2 வாரத்திற்குப்பின் 72 வயது முதியவர் உயிருடன் மீட்பு
குயட்டா: ஈக்வடார் பூகம்பத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 72 வயது முதியவரை, இரண்டு வாரத்திற்குப் பின் மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரின் கடந்த மாதம் 16ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இழுந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

ஈக்வடார் நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் மீட்பு படைகள் அங்கு வந்துள்ளன. அதன்படி, அண்டை நாடான வெனிசுலாவில் இருந்து வந்த மீட்பு படையினர் மனாபி நகரில் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
அப்போது, சுமார் 2 வாரங்களுக்குப் பின்னர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 72 வயது முதியவர் ஒருவரை மீட்புப் படையினர் காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இத்தகவலை சம்பந்தப்பட்ட முதியவரின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் மறுத்துள்ளதாக மற்றொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பாதி இடிந்த நிலையில் இருந்த வீட்டில் அவர் தங்கியிருந்ததாகவும், தினமும் அவரை சந்தித்து, உணவு அளித்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications