அடடா.. டாம் அன்ட் ஜெர்ரி மேல போய் இப்படி அபாண்டமா பழியைப் போடுறீங்களே!
கெய்ரோ: மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதமும், வன்முறையும் அதிகரிக்க யார் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.. பின்லேடனா, மத வெறியா, சர்வாதிகார ஆட்சியாளர்களா.. இல்லைவே இல்லை. டாம் அன்ட் ஜெர்ரிதான் இந்த வன்முறைக்கும், தீவிரவாதத்திற்கும் காரணம் என்று கூறி எகிப்து அரசு அதிகாரி ஒருவர் அதிர வைத்துள்ளார்.
உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள கார்ட்டூன் கதாபாத்திரங்கள் டாம் அன்ட் ஜெர்ரி. இவர்களின் சேட்டைத்தனமாக வீடியோக்களை வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் ரசித்துப் பார்த்து சிரிப்பார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட டாம் அண்ட் ஜெர்ரி தான் வன்முறை அதிகரிக்க காரணமாகிறார்கள் என இப்படி பழியைத் தூக்கிப் போட்டிருக்கிறார் எகிப்து அரசு அதிகாரியான முகம்மது கைராத் சதக்.
கேலியோடு வன்முறை...
இது குறித்து கெய்ரோ பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "கேலியான முறையில் வன்முறையைத்தான் தூண்டுகிறார்கள் டாமும், ஜெர்ரியும். அந்த செய்தியைத்தான் அவர்கள் பரப்புகிறார்கள்.
தீவிரவாத எண்ணம்...
நான் உன்னை உதைப்பேன், குத்துவேன் என்று சொல்வது வன்முறை இல்லையா. அதேபோல குண்டு வைத்துத் தகர்பது போல வரும் காட்சிகள் தீவிரவாதம் இல்லையா?. இதுதான் சிறார்களின் மனதில் அடி ஆழத்தில் பதிந்து அவர்களை வன்முறையாளர்களா, தீவிரவாதிகளாக மாற்றி விடுகிறது" எனத் தெரிவித்துள்ளார் அவர்.
விவாதங்கள்...
இவரது இந்தப் பேச்சு இப்போது எகிப்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது, விவாதங்களையும் எழுப்பியுள்ளது.
கச்சேரி தான் காரணம்...
ஆனால் இதுபோல ஒரு பிரபலமான விஷயத்தை வன்முறையுடன் ஒப்பிட்டுப் பேசுவது உலகில் இது முதல் முறையல்ல. 90களில் நடந்த மர்லின் மேன்சன் என்பவரின் கச்சேரி ஒன்றுதான் பின்னர் நடந்த படுகொலை சம்பவம் ஒன்றுக்குக் காரணம் என்று கூறப்பட்டது நினனவிருக்கலாம்.
ஆனால் டாம் அன்ட் ஜெர்ரியை தீவிரவாதத்திற்கு காரணம் என்று கூறியுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.