பிரிட்டன்: டேவிட் கேமரூன் கட்சி பிரமாதம்... 330 தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்தது
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்தை எட்டிப் பிடித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பிரிட்டன் நாடளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 இடங்களில் 649 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விட்டன. இதில் 330 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பிரதமர் கேமரூனின் கட்சி. 326 இடங்கள் பெரும்பான்மை பலமாகும்.
மறுபக்கம், பிரதான எதிர்க்கட்சியான டேவிட் மிலிபான்ட்டின் லேபர் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. அக்கட்சி 232 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

இங்கிலாந்து தேர்தல்
இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு நேற்று விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடந்தது. 50 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 650 இடங்களில் 326 இடங்களை கைப்பற்றும் கட்சி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

ஆளும் கட்சி வெற்றி
650 தொகுதிகளில் 649 தொகுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 330 இடங்களில் வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 232 இடங்களை வென்றுள்ளது. ஸ்காட்லாந்து தேசிய கட்சி 56 இடங்களையும், சுதந்திர ஜனநாயக கட்சி 8 இடங்களையும் வென்றுள்ளது. பிற கட்சிகள் 15 இடங்களை கைப்பற்றியுள்ளன.

திசை மாறிய காற்று
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தொழிலாளர்கட்சிதான் முன்னணியில் இருந்தது. ஆளுங்கட்சி பின்தங்கியிருந்தது. திடீரென காற்று திசைமாறியது. ஆளுங்கட்சி முன்னணிக்கு வந்தது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

டேவிட் கேமரூன் வெற்றி
பிரதமர் டேவிட் கேமரூன் அவரது விட்னி தொகுதியில் வெற்றி அடைந்துள்ளார். லிபரல் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வின்செண்ட் கேபிள் மற்றும் முன்னாள் அமைச்சர் எட் டேவி, முன்னாள் தலைமை கருவூல செயலர் டேனி அலெக்ஸாண்டர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர். ஆனால் லிபெரல் ஜனநாயகக் கட்சியின் தலைவ்ர் நிக் கிளெக் தனது ஷெபீல்ட் ஹாலம் தொகுதியில் வென்றுள்ளார்.

வெற்றி பேச்சு
தேர்தல் வெற்றி பற்றி கருத்து தெரிவித்த பிரதமர் டேவிட் கேமரூன் கன்சர்வேடிவ் கட்சியின் பொருளாதாரத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகவும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒற்றுமைக்குப் பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார். கடந்த 5 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளம் அமைத்துள்ளதாகவும் இதுவே வெற்றிக்கு வித்திட்டதாகவும் டேவிட் கேமரூன் கூறினார்.

10ஆம் நம்பர் வீடு
கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அதன் தலைவர் டேவிட் கேமரூனே தொடர்ந்து நம்பர் 10 டவுனிங் தெருவில் ( பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ) இன்னும் 5 வருடங்களுக்கு தங்குகிறார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட லேபர்
இதற்கிடையே, லேபர் கட்சித் தலைவர் எட் மிலிபான்ட், தனது கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எலிசபெத் ராணியுடன் சந்திப்பு
தேர்தலில் வெற்றி பெற்ற கேமரூன், பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். லண்டனில் உள்ள அரண்மனையில் ராணி எலிசபெத் உடன் கேமரூன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து ராணி உடன் கேமரூன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிகின்றன.












Click it and Unblock the Notifications