சன்னி முஸ்லிம்களின் தலைவராக மாறனும்.. பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு ஏன்? எர்டோகனின் திட்டம் இதுதான்
அங்காரா: பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வரும் துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். இது பொருளாதார ரீதியாக துருக்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் கூட துருக்கி, தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதன் பின்னணியில் சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் தலைவராக உயர வேண்டும் என்ற துருக்கி அதிபர் எர்டோகனின் நோக்கம் தான் காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நம் நாடு ஏவுகணைகளை அனுப்பியது. 9 பயங்கரவாதிகளின் முகாம் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டது.

இதனை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமன்றி துருக்கி நாட்டின் ட்ரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பி பதிலடி கொடுக்க பாகிஸ்தான் நினைத்தது. ஆனால் நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு அந்த முயற்சியை முறியடித்தது. இந்நிலையில் தான் தற்போது துருக்கியை நம் நாட்டு மக்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு பக்கப்பலமாக இருக்கும் துருக்கி உடனான வர்த்தக உறவை பல்வேறு சங்கங்கள் துண்டித்து வருகின்றன. அதேபோல் துருக்கி என்பது சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற நாடாகும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்வார்கள். இப்போது கோடை சுற்றுலாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்த பலரும் அதனை ரத்து செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் என்பது துருக்கிக்கு பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
ஆனாலும் கூட துருக்கி அதிபர் எர்டோகன் திருந்தவில்லை. பாகிஸ்தான் என்பது எங்களின் சகோதர நாடு. அதற்கு தொடர்ந்து பக்கப்பலமாக இருப்போம் என்று கூறியுள்ளார். இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானுக்கு துருக்கி தொடர்ந்து ஆதரவு அளிப்பதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அடிப்படையில் துருக்கி மற்றும் பாகிஸ்தான் இரண்டும் இஸ்லாமிய நாடுகளாகும். இந்த இருநாடுகளிலும் இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர். துருக்கி - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நல்ல உறவு உள்ளது. பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன் உள்பட பல ஆயுதங்களை வழங்கி உள்ளது. மேலும் பாகிஸ்தானின் பீரங்கி குண்டு தயாரிக்கும் ஆலைகளை தொடங்கவும் துருக்கி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காஷ்மீர் பிரச்சனை வரும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே துருக்கி இருந்துள்ளது.
இதனால் துருக்கி - பாகிஸ்தான் உறவு என்பது பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இவை அனைத்தும் பாகிஸ்தான் பக்கம் துருக்கி நிற்பதற்கான காரணங்களாக இருந்தாலும் கூட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அதாவது பாகிஸ்தான் மற்றும் துருக்கி நாடுகளில் சன்னி முஸ்லிம்கள் தான் அதிகம் உள்ளனர். உலகில் வசிக்கும் இஸ்லாமியர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்களாகவும், 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்களாகவும் உள்ளனர். ஷியா முஸ்லிம்களை எடுத்து கொண்டால் ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் உள்ளனர்.
பிற இஸ்லாமிய நாடுகளில் சன்னி முஸ்லிம்கள் தான் அதிகம் உள்ளனர். இதில் சவூதி அரேபியா, ஐக்கிர அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மோதல்களை விரும்புவது இல்லை. ஆனால் துருக்கி அதிபர் எர்டோகன் மனதில் துருக்கி பேரரசு (ஒட்டமன் பேரரசு) போன்று மீண்டும் செல்வாக்கான தலைவராக மாற வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுமட்டுமின்றி சன்னி இஸ்லாமியர்களின் மத்தியில் பெரிய தலைவராக தலைநிமிர வேண்டும் என்ற விருப்பம் உள்ளது.
இதனால் தான் தற்போது சன்னி இஸ்லாமிய நாடுகளுக்கு துருக்கி தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக சமீபத்தில் வங்கதேசத்தில் கூட துருக்கி தனது உறவை வலுப்படுத்த தொடங்கியது. நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான பிரச்சனையை காரணமாக வைத்து உள்ளே புகுந்துள்ள துருக்கி. வங்கதேசத்தை எடுத்து கொண்டாலும் அங்கு சன்னி இஸ்லாமியர்கள் தான் அதிகம் உள்ளனர்.
இப்படி சன்னி இஸ்லாமியர்கள் நிறைந்த அதேவேளையில் சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஆதரவு கிடைக்காத நாடுகளை தேடி தேடி அரவணைக்க துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் வசிக்கும் சன்னி இஸ்லாமியர்களின் தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர சமீபத்தில் அஜர்பைஜான் - அர்மேனியா இடையேயான பிரச்சனையில் துருக்கி தலையீடு செய்தது. அஜர்பைஜானை எடுத்து கொண்டால் ஷியா இஸ்லாமியர்கள் தான் அதிகம். ஆனால் அர்மேனியாவில் கிறிஸ்தவர்கள் தான் அதிகம். நாகோர்னா - கரபாக் பிராந்தியம் யாருக்கு என்பது தொடர்பாக இருநாடுகள் இடையேயான பிரச்சனையில் துருக்கி அஜர்பைஜானுக்கு ஆதரவு தெரிவித்து வெல்ல வைத்தது. கடந்த 2020ம் ஆண்டில் மோதல் என்பது முடிவுக்கு வந்தது. இதன்மூலம் துருக்கி தனது பலத்தை உலக நாடுகளுக்கு காட்டியது.
அதுமட்டுமின்றி தான் பிற நாடுகளை போல் பெரிய சக்தியாக துருக்கி மாறி உள்ளதை காட்டியது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை துருக்கியில் தான் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இதன்மூலம் தன்னை சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் தலைவர் மட்டுமின்றி முன்னணி தலைவராக உலகத்துக்கு காட்ட துருக்கி அதிபர் எர்டோகன் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications