எத்தியோப்பியா விமான விபத்து.. 2 நிமிடம் தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி!
தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால், எத்தியோப்பியா விமான விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் ஒரு பயணி.
அடிஸ் அபாபா: தாமதமாக விமான நிலையத்திற்கு வந்ததால், எத்தியோப்பியா விமான விபத்தில் இருந்து ஆண் பயணி ஒருவர் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது.
எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கிய விமானத்தை தாமதமாக வந்ததால், தவற விட்டு உயிர் தப்பியுள்ளார் அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்ற ஒரு பயணி. கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இவர், இந்த விமானத்தில் தான் டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால், இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை அவர் தவற விட்டு விட்டார். இதனால் விமான விபத்தில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அண்டோனிஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை.
விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications