இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஈழத் தமிழர்களின் பொது வேட்பாளர் அரியநேந்திரன்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பொதுவேட்பாளராக முன்னாள் எம்பி அரியநேந்திரன் போட்டியிடுவார் என 7 தமிழ் கட்சிகள், 7 பொதுமக்கள் அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே ஆகியோர் களம் காணும் நிலையில் ஈழத் தமிழர்களின் தரப்பில் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்கி உள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலானது அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி பெறப்பட இருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையின் தெற்கே சிங்களர் பகுதிகளில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஈழத் தமிழர்களின் தாயக நிலப் பகுதியான வடக்கு கிழக்கில் இந்தியா கை ஓங்கி நிற்கிறது. இலங்கையை மையமாக வைத்து பல்வேறு அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்தியா, சீனாவின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது விவாதிக்கப்பட்டும் வருகிறது. மகிந்த ராஜபக்சேவின் நாமல் ராஜபக்சேவும் அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே சீனாவை முழுமையாக நம்பக் கூடியது; இந்தியாவை மிகக் கடுமையாக எதிர்க்கக் கூடியது. ரணில் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரில் ஒருவரைத்தான் இந்தியா ஆதரிக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் இலங்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழர்கள் செலுத்தும் வாக்கு மிக முக்கியமானதாக, வெற்றியைத் தீர்மானிக்கக் கூடியதாக் இருந்து வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்து ஈழத் தமிழருக்கான பிரதிநிதித்துவ தலைமை இல்லாத நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த திட்டமிட்டன. அப்படி ஒரு பொதுவேட்பாளருக்கு ஒட்டுமொத்த ஈழத் தமிழரும் வாக்களிப்பார்கள் எனவும் சொல்ல முடியாது. இதனால் ஈழத் தமிழர்களின் பொதுவேட்பாளர் குறித்து பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் முன்னாள் எம்பி அரியநேந்திரனை ஈழத் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவித்துள்ளன. 7 தமிழர் அரசியல் கட்சிகள், 7 பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து அரியநேந்திரனை தமிழர்களின் பொதுவேட்பாளராக அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications