Fake alert: கோட்டு சூட்டை தூக்கி போட்டுவிட்டு ராணுவ உடையில் சண்டைக்கு தயாரானாரா உக்ரைன் அதிபர்?
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரும் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதில்லை.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்கு நடக்கும் நிலவரம் குறித்து அவ்வப்போது சமூகவலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளியிட்டு வருகிறார். அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், நானும் எனது குடும்பமும்தான் ரஷ்யாவின் இலக்காக உள்ளது.
இதற்கு அடுத்து அரசியல் ரீதியாக உக்ரைனை அழிக்க ரஷ்யா நினைக்கிறார்கள். நான் இங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து நான் எங்கும் செல்ல மாட்டேன்.

கீவ் நகர்
கீவ் நகருக்குள் அழிவை ஏற்படுத்துவதற்காகவே ரஷ்ய படைகள் அங்கு நுழைந்துள்ளன. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உக்ரைன் அரசு பணியாற்ற தேவையான அதிகாரிகளுடன் அரசு இல்லத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். எந்த நாடும் உதவ முன்வராத நிலையில் தன்னந்தனியாக போராடி வருகிறோம் என்றார்.

தன்னந்தனியாக போராட்டம்
இரவோடு இரவாக அதிபர் அலுவலகம் உள்ள கீவ் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே மெலிடேபோல் நகரையும் அவர்கள் கைப்பற்றிவிட்டார்கள். உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை அழிப்பதற்காக கடல், வான்வெளி வழியாக ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்ய படைகள்.

கீவ் நகரில் இருந்து அதிபர் வீடியோ
இந்த நிலையில் கீவ் நகரில் இருந்து அதிபர் பேசிய வீடியோவில் உக்ரைனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆயுதங்களை கீழே போட மாட்டோம். போரை நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை கீழே போடுவோம். உக்ரைன் ராணுவத்தினரை சரணடைய சொல்லிவிட்டதாக வதந்தி பரவுகிறது.

வதந்திகளை நம்பாதீர்
இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். பிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரானுடன் பேசியுள்ளேன். மற்ற நாடுகளிலிருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றார். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்திடம் வந்து ஆயுதங்களை பெற்று சண்டையிட அதிபர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

ராணுவ உடையில் உக்ரைன் அதிபர்?
அவ்வாறு வேறு இடங்களுக்கு செல்லும் குழந்தைகள் தந்தையை விட்டு செல்ல மனமின்றி கண்ணீர் விடும் காட்சிகள் கல்லையும் கரைய செய்யும் அளவுக்கு இருக்கின்றன. ராணுவத்திடம் நிறைய மக்கள் வந்து ஆயுதங்களை பெற்று செல்கிறார்கள். அது போல் அதிபர் ஜெலன்ஸ்கியும் ராணுவ உடை அணிந்து கொண்டு சண்டை செய்ய தயாராக இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தின் படவரியாக " தாய் நாட்டை காக்க உக்ரைன் துருப்பில் இணைந்துவிட்டார். இவர்தான் உண்மையான தலைவர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பழைய படம்
இந்த புகைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது. டன்பாஸில் உள்ள உக்ரைன் ராணுவ தளத்திற்கு அதிபர் செலன்ஸ்கி ராணுவ உடையில் சென்றபோது எடுக்கப்பட்டது. இதே உடையில் அந்த பகுதியை ஜூன் மாதமும் பார்வையிட்டார். அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications