அமெரிக்கா: 1 முதல் 8 வயது 5 குழந்தைகளை கொன்று குப்பை பையில் போட்டு வீசிய தந்தை கைது
அலபாமா: அமெரிக்காவில் 5 குழந்தைகளை கொன்று குப்பை பையில் போட்டு நெடுஞ்சாலையோரம் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்தவர் திமோதி ரே ஜோன்ஸ்(32). அவருக்கு 1 முதல் 8 வயது வரையில் 5 குழந்தைகள் இருந்தனர். அவரது மனைவி விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார். ஜோன்ஸ் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் குழந்தைகளை தொடர்பு கொள்ள ஜோன்ஸின் முன்னாள் மனைவி முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அவர் குழந்தைகளை காணவில்லை என்று கடந்த 3ம் தேதி போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின் பேரில் போலீசார் குழந்தைகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜோன்ஸ் குழந்தைகளை கொன்று அவர்களின் உடல்களை குப்பை போடும் பைகளில் தனித்தனியே வைத்து வாகனத்தில் எடுத்துச் சென்று அலபாமா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே வீசிவிட்டார்.
அதன் பிறகு போதைப் பொருள் உட்காண்டு மிசிசிபி மாநிலத்தில் உள்ள ஸ்மித் கவுன்ட்டி வழியாக வந்த ஜோன்ஸின் காரை போலீசார் நிறுத்தினர். அப்போது ஜோன்ஸ் போதையில் இருப்பது தெரிந்தது. மேலும் காரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், ரத்தம் இருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அவர் 5 குழந்தைகள் காணாமல் போன வழக்கில் தேடப்படும் நபர் என்பதை அவர்கள் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஆனால் அவர்களின் உடல்களை வீசிய இடத்தை தெளிவாக கூறவில்லை. இதையடுத்து அவரையே சம்பவ இடத்திற்கு போலீசார் செவ்வாய்க்கிழமை அழைத்துச் சென்றனர். அப்போது அவர் குழந்தைகளின் உடல்களை வீசிய இடத்தை காண்பித்தார். அந்த பைகளை திறந்தபோது குழந்தைகளின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன.