எஸ்.எம்.எஸ்ஸை உருவாக்கிய மட்டி மக்கொனென் மரணம்
லண்டன்: செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்த மட்டி மக்கொனென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
எஸ்.எம்.எஸ் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகள் செல்போன்களில் மிக சர்வ சாதாரணமாக அனுப்பப்பட்டு வந்தன. வாட்ஸ் அப் போன்ற மெசன்ஜெர்கள் வரும்வரையில் இளசுகளிடம் கொடி கட்டி பறந்தது எஸ்.எம்.எஸ்தான். அப்படிப்பட்ட எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறையை முதன்முறையாக கண்டுபிடித்தவர்தான் மட்டி மக்கொனென்.

63 வயதான இவர் பின்லாந்தை சேர்ந்தவர். கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட இவர் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இருந்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை பின்லாந்தில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
20 ம் நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக எஸ்.எம்.எஸ் திகழ்கிறது. எனவே, இவர் "எஸ்.எம்.எஸ்" முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இது குறித்து 2012ம் ஆண்டில் பி.பி.சிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்த கண்டுபிடிப்பு தனது தனிப்பட்ட சாதனை அல்ல. ஒரு கூட்டு முயற்சி என தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.எஸ் திட்டத்தை உருவாக்கும் முயற்சிக்கு நோக்கியா செல்போன் நிறுவனம் அவருக்கு உதவி செய்தது. எஸ்.எம்.எஸ் அனுப்ப கூடிய வகையில் நோக்கியா 2010 ரக செல்போனை உருவாக்கியது. அதில் இருந்து 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications