சவுதி: ரூ.6.64 கோடி நஷ்டஈடு தரத் தவறிய பிலிப்பைன்ஸ் கொலையாளியின் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவில் சூடானைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த பிலிப்பைன்ஸை சேர்ந்த நபருக்கு பொது மக்கள் முன்னிலையில் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளிக்கத் தவறியதை அடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் ஜோஸ்லிடோ லிடாசான் ஜபான்டா(35). டைல்ஸ் போடுபவரான அவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அவர் சூடானை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாகவும், கொள்ளையடித்ததாகவும் ரியாத் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜபான்டாவுக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் கொலையானவரின் குடும்பத்திற்கு ரூ.6 கோடியே 64 லட்சம் நஷ்ட ஈடு அளித்தால் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜபான்டாவின் குடும்பத்தார் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசால் ரூ.3 கோடியே 24 லட்சம் தான் திரட்ட முடிந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக் கொண்டு ஜபான்டாவுக்கு மன்னிப்பு வழங்க கொலையானவரின் குடும்பத்தார் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை பொது இடத்தில் வைத்து ஜபான்டாவின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications