துபாய் தேரா பகுதியில் பயங்கர தீ விபத்து- இரு 5 மாடி கட்டிடங்கள் எரிந்து சாம்பல்!
தேரா: துபாயின் தேரா பகுதியில் சற்று முன்னர் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன.
கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
Fire in deira dubai. Current view from my home balcony. Hope everyone's safe. pic.twitter.com/4Qi8cVGVR7
— Shahid. Mohammed (@shahidm) November 23, 2015
இந்த தீ விபத்து இந்திய நேரப்படி இரவு 7.25 மணிக்கு நிகழ்ந்துள்ளது. ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Fire accident in Deira. #Dubai Metro service in Green line stopped temporary.! pic.twitter.com/312SG1pcxm
— Yazar Shareek (@shareek_hy) November 23, 2015
அந்த கட்டிடங்களில் இருப்போரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படைவீரர்கள் மீட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் க்ரீன் லைன் பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுமார் 3.30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.