‘செவ்வாயில் யாராவது இருக்காங்களா..?’... புறப்பட்டது ரஷ்ய- ஐரோப்பிய கூட்டணியின் புதிய விண்கலம்!
மாஸ்கோ: செவ்வாய் கிரகத்தில் உயிரினம் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்ய, ரஷ்ய-ஐரோப்பிய கூட்டு முயற்சியில் புதிய விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்ற சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய பூமியைப் போன்றே இருக்கும் அந்த கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
தொடர்ந்து இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய விண்கலம்...
இந்நிலையில், ரஷ்யா - ஐரோப்பிய கூட்டு முயற்சியில் செவ்வாய் கிரகம் குறித்து ஆராய புதிய விண்கலம் ஒன்று, கடந்த திங்களன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

வாயு ஆய்வுக் கலன்...
கஜகஸ்தானின் பைகனூர் ஏவுதளத்திலிருந்து "டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர்' என்கிற வாயு ஆய்வுக் கலனைச் சுமந்து கொண்டு, இந்த ரஷ்ய புரோட்டான் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

காற்று மண்டலம் ஆய்வு...
அடுத்த ஏழு மாதப் பயணத்துக்குப் பிறகு, அதாவது அக்டோபர் மாதவாக்கில் இந்த விண்கலத்தை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டானது செவ்வாய் கிரகத்தை அடையும். பின்னர், டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் அந்த கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள காற்று மண்டலத்தை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல் அளிக்கும்.

மீத்தேன் அளவு...
நமது பூமியின் காற்று மண்டலமானது இங்குள்ள உயிரினங்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவை அதிகமாகக் கொண்டுள்ளது. இதேபோல், செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் எப்படி மீத்தேன் வந்தது என்பதை ஆய்வு செய்து அங்கு நுண்ணுயிர்கள் இருந்தனவா, இருக்கின்றனவா என இந்த விண்கலம் ஆய்வு செய்ய இருக்கிறது.

விரிவான சோதனை...
இத்தகைய வாயு ஆய்வுகள் ஏற்கனவே பலமுறை செவ்வாயில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இம்முறை பழைய சோதனைகளை விட விரிவாக ஆய்வு செய்ய ரஷ்யாவும், ஐரோப்பாவும் முடிவு செய்துள்ளன.

ரோவர்...
இதன் அடுத்தகட்டமாக, வரும் 2018ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா என ரோவர் விண்கலம் அனுப்பப்படும் என ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்காஸ்மோஸ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications