இஸ்ரேலின் 5 மாத பிளான்! முதலில் பேஜர்.. அடுத்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகள்.. அலறும் ஹிஸ்புல்லா
பெய்ரூட்: மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே பல மாதங்களாக நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், சமீபத்தில் லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இது சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லெபனான் நாட்டில் அடுத்தடுத்து இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. இதில் இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. முதல் தாக்குதல் பேஜர் சாதனத்தைக் கொண்டு நடந்த நிலையில், அடுத்து வாக்கி டாக்கிக்கள் வெடித்துச் சிதறியதால் ஏற்பட்டுள்ளது.

அச்சம்: இரண்டுமே இப்படி தகவல் தொடர்பு சாதனங்களால் நடந்துள்ள நிலையில், இதற்கு இஸ்ரேலின் தொடர்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த இந்த பெரிய தாக்குதல்கள் ஈரான் ஆதரவு கொண்டு இஸ்ரேலில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் ரேங்க் அதிகாரிகளையே கூட அச்சப்பட வைத்துள்ளதாம்.
நேற்று புதன்கிழமை ஹிஸ்புல்லா அமைப்பினர் வலுவாக உள்ள லெபனானின் தெற்கிலும், அந்நாட்டின் தலைநகரான பெய்ரூட்டிலும் அடுத்தடுத்து வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறின. ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி டாக்கிகளே வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பேஜர்கள் வெடிப்பு: அதற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை லெபனான் முழுவதும் பல ஆயிரம் பேஜர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. அதேநேரம் இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா கருதுகிறது. ஏனென்றால் காசாவில் இஸ்ரேல் நடத்தும் போருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஹிஸ்புல்லா, இஸ்ரேல் ஆயுத தளங்களைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தி இருந்தது. அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என ஹிஸ்புல்லா கருதுகிறது.
சீர்குலைக்கும் முயற்சி: இப்படி அடுத்தடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அந்த குழுவைச் சீர்குலைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. ஹிஸ்புல்லா சற்றும் எதிர்பார்க்காத வழிகளிலும் தாக்குதல் நடத்த முடியும் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
இது தொடர்பாக ஒரு மூத்த லெபனான் பாதுகாப்பு அதிகாரி, "இது இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட்டின் செயல் என்றே நினைக்கிறோம். அவர்கள் பல மாதங்களுக்கு முன்பே ஹிஸ்புல்லா அமைப்பினர் வாங்கும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளில் வெடிபொருட்களை வைத்திருக்கிறார்கள். தைவானில் இருந்து வாங்கிய 5,000 பேஜர்களில் ஒவ்வொன்றிலும் மூன்று கிராம் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களால் அதை ஹிஸ்புல்லா அமைப்பினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதுதான் இப்போது வெடித்துச் சிதறியுள்ளது" என்றார்.
எப்போது வாங்கப்பட்டவை: கடந்த புதன்கிழமை வெடித்துச் சிதறிய வாக்கி-டாக்கிகள் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாங்கப்பட்டதாகும். பேஜர்கள் வாங்கப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்த வாக்கி டாக்கிகளையும் வாங்கியுள்ளனர். அதுவும் இப்போது வெடித்துச் சிதறியிருக்கிறது.
இந்த தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது. இது தொடர்பாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸும் கருத்து கூறியுள்ளார். அதாவது, "பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை ஆயுதமாக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும். இந்தத் தாக்குதல்களால் அங்குச் சூழல் மோசமாகலாம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications