அந்தமானில் காலை முதல் இரவு வரை... 5 முறை அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்!
போர்ட்பிளேர்: அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை முதல் இரவு வரை அடுத்தடுத்து தொடர்ந்து மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் முதலில் இன்று காலை 10.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

பொதுமக்கள் அச்சத்துடன் சாலைகளில் குவிந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருந்தது. அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து 250 கி.மீ தொலைவில் பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் முற்பகல் 11.07 மணிக்கு மற்றொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது. பின்னர் இன்று இரவு 6.59, 7.33, 8.12 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டரில் 5 அலகுகளாக பதிவாகி உள்ளது. ஏற்கனவே ஜூலை 8-ந் தேதியன்று அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications