பாரீஸில் தரையிறங்குகையில் ஏர் பிரான்ஸ் விமானம் மீது மோத வந்த ட்ரோன்
பாரீஸ்: பாரீஸில் தரையிறங்குகையில் ஏர் பிரான்ஸ் விமானம் மீது ட்ரோன் மோதும்படி வந்துள்ளது. துணை விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் ஏர்பஸ் ஏ320 கடந்த மாதம் 19ம் தேதி ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு பயணிகளுடன் கிளம்பியது. ஏர்பஸ் ஏ320ல் 160 பேர் பயணிக்கலாம். ஆனால் இந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் தெரியவில்லை.
விமானம் பாரீஸில் உள்ள சார்லஸ் டி கால் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. விமானம் 5 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருக்கையில் ட்ரோன் ஒன்று பயணிகள் விமானத்தின் மிக அருகில் வந்ததை துணை விமானி பார்த்தார்.
உடனே அவர் ஆட்டோ பைலட்டில் இருந்த விமானத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ட்ரோன் மீது மோதுவதை தவிர்த்தார். ட்ரோன் பயணிகள் விமானத்தின் இடது இறக்கைக்கு 5 மீட்டர் தூரத்தில் கடந்து சென்றுள்ளது.
துணை விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்ப்டடுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.