பீர் டின்னில் காந்தி படம் ... அமெரிக்க நிறுவனத்தின் திமிர்த்தனம்... மன்னிப்பு கோரியது!
வாஷிங்டன் : மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பீர் டின்னில் போட்டதற்காக அமெரிக்கக் கம்பெனி மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நியூ இங்கிலாந்து ப்ரூவிங் கம்பெனி என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் காந்தி பாட் என்ற புதிய வகை பீர் டின் ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த பீர் டின்களில் நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வெளியிட்டது.
அமெரிக்க நிறுவனத்தின் இச்செயலுக்கு கண்டனம் கிளம்பியது. டின் பீர் விளம்பரத்தில் உள்ள காந்தி படத்தை அகற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் நம்பள்ளி கோர்ட்டில் வக்கீல் ஜனார்த்தன கவுடா என்பவர் இதை எதிர்த்து வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது :-
இந்தியாவில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மது நிறுவனம் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளது. அவர்களது செயல் கண்டனத்துக்குரியது.
பீர் டின்னில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டதற்காக அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தேச கவுரவச் சட்டம் 1971 பிரிவு 124 (ஏ)யின்படி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி இருப்பதை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள இயலாது.
இவ்வாறு அவர் தன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், டின் பீரில் காந்தி படம் போட்டதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது சம்பந்தப்பட்ட அமெரிக்க மது நிறுவனம்.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காந்தி பட லேபிள் மூலம் இந்திய மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். உலகளவில் போற்றப்படும் ஒரு மனிதரை கவுரவிக்க வேண்டும் என்பதை தவிர காந்தியின் படத்தை பயன்படுத்தியதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.
ஒரு பொருளை உருவாக்க நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். மது குறித்த மகாத்மா காந்தியின் பேச்சுகளை இழிவுப்படுத்தும் எண்ணம் இல்லை. வாசனையாகவும், சுத்த சைவ பொருளான காந்தி பாட், பரிசுத்தமும், அன்பும், உண்மையுமானது.
காந்தி பாட் நல்ல உணவுடன் பருகக் கூடியது மட்டுமல்லாமல், அதை பருகுபவர்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இதனை விரும்புகிறார்கள்.
காந்தியின் பேரனும், பேத்தியும் இந்த லேபிளை பார்த்து வியந்துள்ளனர். எனவே காந்தி குறித்த எங்களுடைய உண்மையான மரியாதையை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications