கடைசி வார்னிங்.. “தப்பிச்சு போயிடுங்க”.. 3 மணி நேரம் கெடு விதித்த இஸ்ரேல்.. காசாவில் பதற்றம்!
அவிவ்: காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற 3 மணி நேரம் காலக்கெடு விடுத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதையையும் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் அரசு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 9வது நாளாக தொடரும் இந்த போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், எனவே காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்தது.
காசாவின் வடக்குப் பகுதியில் இருந்து 11 லட்சம் பொதுமக்களை வெளியேற்றும்படி ஐ.நா மூலம் ஹமாஸ் குழுவுக்கு இஸ்ரேல் தெரிவித்தது. 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால், ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் இந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளனர். காசாவில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா மக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு அஞ்ச வேண்டாம் என்றும், துணிச்சலுடன் செயல்படுங்கள் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால், உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேற கூடுதலாக 3 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட காசாவில் வெளியே செல்லும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பான பாதையில் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அதிகாரபூர்வ 'எக்ஸ்' ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காசா நகரம் மற்றும் வடக்கு காசாவில் வசிப்பவர்கள் கவனத்திற்கு, ஏற்கெனவே கடந்த நாட்களில், உங்கள் பாதுகாப்பிற்காக தெற்குப் பகுதிக்கு இடம்பெயருமாறு உங்களை வலியுறுத்தி இருக்கிறோம். இன்று 10 மணி முதல் 1 மணி வரை இந்த வழியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
வடக்கு காசாவில் இருக்கும் மக்கள் தெற்கு காசாவுக்குச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு முக்கியம். தயவுசெய்து எங்களின் அறிவுரைகளை பின்பற்றி தெற்கு நோக்கி செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்கள் ஏற்கனவே தங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிமக்கள் தெற்கு நோக்கி வெளியேறுவதற்கு பாதுகாப்பான பாதை (Path to safety) எனக் குறிப்பிட்டு, சாலா-அல்-தின் தெரு என்ற சாலையின் வரைபடமும் இஸ்ரேல் ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 3 மணி நேரம் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பிறகு இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications