பிரான்ஸ் விமானத்தில் 2வது கருப்புப் பெட்டியும் மீட்பு!
பாரிஸ்: பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி 9 நாட்கள் தேடுதலுக்கு பிறகு நேற்று கிடைத்துள்ளது. விபத்திற்கான காரணம் துணை விமானிதான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 150 பேரும் இறந்தனர். பலியானவர்களில் 67 பேர் ஜெர்மானியர்களென்றும், 45 பேர் ஸ்பானியர்கள் என்றும் தெரிய வந்தது.
கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். விபத்து நடந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை நெருங்கி விபத்து நடந்த அன்றே, விமானத்தின் முதல் கருப்பு பெட்டியை மீட்டு உடனடியாக ஆய்வு செய்தது.
அதில் உள்ள காக் பிட் வாய்ஸ் ரெக்கார்டரை ஆய்வு செய்த போது, விமானி வெளியே சென்ற நேரத்தில் துணை விமானியான லுபிட்ஸ் விமான கட்டுப்பாட்டு அறையின் கதவை மூடிவிட்டு, வேண்டுமென்றே விமானத்தை மோதியதும், இந்த கொடூரத்தை பயணிகள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில் 9 நாளாக ஆல்ப்ஸ் மலைத்தொடரில் நடந்த தொடர் தேடுதலின் விளைவாக விமானத்தின் 2 ஆவது கருப்பு பெட்டியும் கிடைத்துள்ளது. இதில்தான் முக்கிய தொழில்நுட்ப விவரங்கள் பதிவாகியிருக்கும். இதன் மூலமாக விமானம் விபத்துக்குள்ளான கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications