வெறும் 2 நாளில்.. உலக பணக்காரர்கள் 500 பேரின் சொத்து மதிப்பு $500 பில்லியன் சரிந்தது!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரி காரணமாக, உலக பணக்காரர்கள் 500 பேரின் சொத்து மதிப்பு வெறும் இரண்டே நாட்களில் 500 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்திருக்கிறது.
உலக பில்லியனர்களின் பட்டியலை ப்ளூம்பெர்க் தினமும் வெளியிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில் இந்த இழப்பு பற்றிய விவரங்கள் தெரிய வந்திருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நியூயார்க் பங்குச் சந்தை மூடப்படும் போது இந்த பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. கடந்த ஏப்.3ம் தேதி வெளியான அறிக்கையில்தான் இந்த விஷயங்கள் வெளியில் தெரிய வந்தன. 'Stock Market Drop Erases $208 Billion From Bezos, Zuckerberg, Other Billionaires' என்கிற பெயரில் கடந்த 3ம் தேதி ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் உலக பங்கு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அன்றைய தினம் மட்டும் $208 பில்லியன் (சுமார் 17.5 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு முதலீட்டாளர்கள் இழப்பை எதிர்கொண்டார்கள் என்று தெரிவித்திருந்தது.
யார் இந்த முதலீட்டாளர்கள்? மார்க் ஜுக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோர்தான் இந்த முதலீட்டாளர்கள். இவர்களை போன்ற பெரும் பணக்காரர்கள்தான் நிதியை இழந்திருக்கின்றனர்.
இதில் மார்க் ஜுக்கர்பெர்க் $17.9 பில்லியன் (சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்), ஜெஃப் பெசோஸ் $15.9 பில்லியன் (சுமார் 1.3 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு இழந்துள்ளனர். முதல்நாள் மட்டுமே இப்படி எனில் நேற்றைய தினம் இதை விட அதிக இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் 2 நாட்களில் 500 பில்லியன் அளவுக்கு பணக்காரர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு மூல காரணம் டிரம்பின் வரி விதிப்புதான். சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் வரி போட்டால் ஓகே என்று சொல்லலாம். அதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. அமெரிக்காவும், சீனாவும் பாம்பும் கீரியுமாக இருக்கின்றன. எனவே வரி போடுவது கேட்க நியாயமாக இருக்கிறது. ஆனால் பக்கத்து நாடான கனடாவுக்கும், மெக்சிகோவுக்கும், நட்பு நாடுகளான இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் கூட டிரம்ப் வரி போட்டு வைத்திருக்கிறார். எனவே எல்லா நாடுகளும் அமெரிக்கா மீது கடுப்பில் இருக்கின்றன.
சீனா பதிலுக்கு வரியை விதித்திருக்கிறது. கனடாவும் பதில் வரியை போட்டிருக்கிறது. எனவே பதிலடி வரி காரணமாக அமெரிக்காவின் பங்கு சந்தை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக அமெரிக்காவின் ஆப்பிள் 1 கிலோ சீனாவில் 10 டாலருக்கு விற்று வந்தது. ஆனால் டிரம்ப்பின் வரி காரணமாக சீனாவும் 34% அளவுக்கு பதில் வரியை போட்டுவிட்டது. இதனால் அமெரிக்க ஆப்பிளின் விலை 1 கிலோ 13.4 டாலராக உயர்ந்துவிடும். எனவே சீன மக்கள் வேறு நாடுகளின் ஆப்பிளை வாங்க தொடங்குவார்கள். இது அமெரிக்க ஆப்பிள் உற்பத்தியாளரை பாதிக்கும். இப்படி ஒவ்வொரு துறையும் வரியால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இப்படியே போனால் அமெரிக்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்வசேத அளவில் சீனாவின் கைதான் தற்போது ஓங்கியிருக்கிறது. அதற்கு மாற்றாக அமெரிக்கா வளர வேண்டும் எனில் வர்த்தகம் விஷயத்தில் கொஞ்சம் நெளிவு சுளிவு தேவை. டிரம்ப் அப்படிப்பட்ட ஆள் கிடையாதே. எனவேதான் அமெரிக்க பணக்காரர்கள் இப்படியான இழப்பை எதிர்க்கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications