சித்திரை திருநாள் கொண்டாட்டத்தில் மிச்சிகன் மாகாணம் பங்கேற்பதில் பெருமை.. கவர்னர் க்ரெட்சன் விட்மர்!
மிச்சிகன்: அமெரிக்காவின் மிச்சிகன் தமிழ் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறும் சித்திரை திருநாளில் பங்கேற்பதில் பெருமை கொள்வதாக மிச்சிகன் கவர்னர் க்ரெட்சன் விட்மர் கூறியுள்ளார்.
தமிழ் மொழியின் பெருமை
இது தொடர்பாக மிச்சிகன் கவர்னர் க்ரெட்சன் விட்மர் வெளியிட்ட அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- உலகம் முழுவதும் மிக தொன்மையான மொழியாக தமிழ் மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 74 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள தமிழ் சமூகத்தினர் மாகாணத்தின் கலாசாரம் மற்றும் சமூகத்துக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளனர் .
தமிழுக்கு அளப்பரிய செயல்
தமிழ்மொழியின் கலாசாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 1975-ம் ஆண்டு 'மிச்சிகன் தமிழ் சங்கம்' என்ற அமைப்பினை நிறுவினர். இந்த மிச்சிகன் தமிழ் சங்கம் மாகாணத்தில் தமிழ் பள்ளிகளை அமைத்து குழந்தைகளுக்கு கல்வி போதித்தும், புதிய தலைமுறையினரிடம் தமிழை கொண்டு சென்று பாதுகாப்பதிலும் அளப்பரிய செயல்களை செய்து வருகிறது.
சித்திரை திருநாள்
தமிழ் மொழியின் மரபுகள், பாரம்பரியம் ஆகியவை மிச்சிகன் மாகாணத்திலும், நாட்டிலும் பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார வரலாற்றின் முக்கிய அம்சங்களில் பெரும் பங்காற்றியுள்ளன. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி மிச்சிகன் தமிழ் சங்கத்தினர் மற்றும் தமிழ் சமுகத்தினர் தமிழின் சித்திரை மாத வருகையை குறிக்கும் வகையில் சித்திரை திருநாளை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.
மிச்சிகன் மாகாணம் பங்கேற்கிறது
மிச்சிகன் மாகாணம் இந்த சித்திரை திருநாள் கொண்டாட்டத்தில் பங்கு கொள்வதில் பெருமை கொள்கிறது. மேலும், மிச்சிகன் தமிழ் சங்கம் நமது மாகாணத்துக்கு செய்யப் போகும் பங்களிப்புக்காக அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு மிச்சிகன் கவர்னர் க்ரெட்சன் விட்மர் கூறியுள்ளார்.