100க்கும் மேல் பிணைக்கைதிகள்.. காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. 26/11க்கு நிகரான பயங்கரம்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். நேற்று மாலை ஹோட்டலுக்குள் சென்ற தீவிரவாதிகள் இன்னும் அங்கு பிணைக்கைதிகளை பிடித்து வைத்து இருக்கிறார்கள்.
தற்போது சில பிணைக்கைதிகள் மட்டும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள். ராணுவம் இவர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.
மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்தது போலவே தீவிரவாதிகள் அந்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்கி உள்ளனர். இன்னும் இரண்டு தீவிரவாதிகள் உள்ளே இருப்பதாக தகவல் வந்து இருக்கிறது.
உள்ளே சென்றனர்
முதலில் இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நேரப்படி சரியாக நேற்று இரவு 9 மணிக்கு நடந்து இருக்கிறது. காபூலில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. நான்கு தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று இருக்கிறார்கள். முதல் தரை தளத்தில் மோசமாக துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள்.
ஊழியர்கள்
அங்கு கீழே இருந்த ஊழியர்கள் அனைவரையும் முதலில் தாக்கி இருக்கிறார்கள். முக்கியமாக ஹோட்டலில் பாதுகாப்பிற்கு இருந்த அதிகாரிகளை சுட்டுள்ளனர். அதன்பின் அங்கு இருக்கும்மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
ஆயுதம்
இவர்கள் சிறிய ரக குண்டுகள் நிறைய வைத்து இருந்ததாக ஆப்கான் ராணுவம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல் அனைவரும் நிறைய ஏகே 47 ரக துப்பாக்கிகளும், கை துப்பாக்கிகளும் வைத்துள்ளனர். நால்வரும் கையில் பெரிய பைகளில் ஆயுதங்கள் கொண்டு வந்துள்ளனர்.
மக்கள்
இவர்கள் அந்த ஐந்து மாடி ஹோட்டலில் உள்ள அனைத்து மக்களையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். 100கும் அதிகமான மக்கள் மாட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் முக்கிய ஐடி கருத்தரங்கு ஒன்று அங்கு நடந்து இருக்கிறது. அவர்களும் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2 பேர்
தற்போது ராணுவம் இதில் இரண்டு தீவிரவாதிகளை கொலை செய்து இருக்கிறது. இவர்கள் இருவரும் தரைத்தளத்தில் இருந்துள்ளார்கள். உள்ளே சென்று ராணுவம் அதிரடியாக அவர்களை வீழ்த்தியது. இதில் ராணுவ வீரர்களும் மோசமாக காயம் அடைந்தனர்.
இன்னும் இருவர்
அந்த ஹோட்டலில் இன்னும் 2 தீவிரவாதிகள் உள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது மேல் மாடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள்தான் அதிகமான பிணைக்கைதிகளை பிடித்து வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
5 பொதுமக்கள்
இதுவரை 5 பொதுமக்கள் மரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இன்னும் பலர் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 100 பேர் ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.