ஹாலிவுட் நடிகை ஹேலி பெர்ரியிடம் 50 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், தன்னை நடிகை ஹேலி பெர்ரியின் கணவர் மார்டினஸ் கடுமையாக தாக்கியதாகக் கூறி அவரிடம் 50 லட்சம் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் ஹேலி தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாரிஸ் நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அப்போது வி.வி.ஐ.பி.,களுக்கான பாதை வழியாக லேக்ஸ் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த போது ரொனால்டோ ஓவன்ஸ் எனும் விமான நிலைய ஊழியர் அவர்களை போட்டோ எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மார்டினஸ் அவரது கையில் வைத்திருந்த குழந்தைகளுக்கான சக்கர இருக்கையைக் கொண்டு பலமாகத் தாக்கி கிழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த ஓவன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நீதிமன்றத்தில், ஹேலி பெர்ரி மீது ஓவன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குத் தொடர்ந்தார். தனது மனுவில், தான் பணியில் இருந்த போது மார்டினஸ் தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், ஹேலி மார்டினஸ் கோபத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் அவரை தூண்டி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை எனக் கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு ஹேலி பெர்ரியிடம் நஷ்ட ஈடாக 50 லட்சம் டாலர் கேட்டு நீதிமன்றத்தில் ஓவன்ஸ் மீண்டும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications