பயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது
Recommended Video

இஸ்லாமாபாத்: இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள தீவிரவாதிகளின் முகாம்களில் கடந்த மாதம் 26ம் தேதி, அதிரடி தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாகவும், எண்ணிக்கை குறித்து துல்லியமாக தெரியாது என்றும் விமானப்படை அறிவித்துள்ளது. ஆனால், வெறும் மரங்கள் மீதுதான், இந்தியா குண்டு வீசியதாக பாகிஸ்தான் கூறி வருகிறது.
இதனிடையே, குண்டு வீசப்பட்ட இடத்தில் இருந்த மதரசாவிலிருந்து மாணவர்கள் பலரை பாகிஸ்தான் ராணுவம், பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துவிட்டு பிறகு, அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ராணுவம் குவிப்பு
இந்திய விமானப்படை தாக்கியது, பாலகோட்டில், மதரசா என்ற போலி பெயரில் செயல்பட்ட தீவிரவாத பயிற்சி முகாம் என்று கூறப்படுகிறது. இந்த மதரசாவில், அப்பாவி மாணவர்களும் பயின்று வந்துள்ளனர். இந்திய விமானப்படை இந்த மதரசாவில் தாக்குதல் நடத்தியதற்கு சில நாட்கள் முன்பிருந்து, பாகிஸ்தான் ராணுவம் அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு
புல்வாமாவில் சிஆர்பிஎப் படையினர் கொல்லப்பட்டதால், இந்தியா எப்படியும் பதிலடி, தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மதரசாவிற்கு, பாகிஸ்தான் ராணுவம் பாதுகாப்பு அளித்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில், விமானம் மூலமாக சென்று, இந்திய விமானப்படை அங்கே கடந்த 26ம் தேதி தாக்குதல் நடத்தியது.

வேறு இடம்
இதையடுத்து, அந்த வளாகத்தில் தங்கியிருந்த மாணவர்கள் பலரையும் பாகிஸ்தான் ராணுவம், வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. அது எந்த இடம் என்று தெரியவில்லை. இதன்பிறகு மாணவர்களை அவர்களது வீடுகளிலேயே கொண்டு சென்று விட்டுள்ளது. இந்த நிலையில், அந்த மாணவர்கள் தங்கள் உறவினர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் தற்போது வெளியே வந்துள்ளது.

பயங்கர சத்தம்
பிப்ரவரி 26ம் தேதி அதிகாலையில், நல்ல தூக்கத்தில் இருந்தபோது, ஒரு பயங்கர சத்தம் கேட்டு எல்லோரும் விழித்தெழுந்தோம். அந்த சத்தம் மிக பயங்கரமாக இருந்தது. ஓரளவுக்கு பக்கத்திலேயே கேட்டது. அதன்பிறகு அந்த சத்தம் கேட்கவில்லை. எனவே, நாங்கள் ஏன் என்று தெரியாமல் திருதிருவென விழித்தோம். பிரம்மையாக இருக்கலாம் அல்லது, பூகம்பமாக இருக்கலாமோ என சந்தேகத்தில் மீண்டும் தூங்கிவிட்டோம் என கூறியுள்ளனர்.

விமானப்படை குண்டு வீச்சு
மதரசாவின் மற்றொரு பக்கத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் பகுதி இருந்துள்ளது. இன்னொரு பக்கம், இதுபோன்ற அப்பாவி மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் இருந்தபகுதியில்தான் இந்திய விமானப்படை குண்டுகளை வீசியதாக தெரிகிறது. இப்போது அந்த பகுதியின் தடயத்தை பாகிஸ்தான் ராணுவம் மாற்றியமைத்துள்ளது. இதற்காகவே மாணவர்கள் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் சில நாட்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications