வன்முறையின் உச்சத்தில் வங்கதேசம்! இந்து கோயில்கள், இந்திய கலாச்சார மையங்கள் சூறையாடல்
டாக்கா: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, அங்கிருந்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் வங்கதேசத்தில் இந்திய கலாச்சார மையம், இந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது. அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது.
போராட்டத்தில் கலவரக்காரர்கள் வங்கதேசத்தில் உள்ள இந்திய கலாச்சார மையம் மற்றும் இந்து கோயில்களை சேதப்படுத்தியுள்ளனர். டாக்காவின் தன்மோண்டி பகுதியில் அமைந்துள்ள இந்திரா காந்தி கலாசார மையம் வன்முறை கும்பலால் சேதப்படுத்தப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் பங்கபந்து பாபன் உள்ளிட்டவை வன்முறைக்காரர்களால் தீ வைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு தன்மோண்டி பகுதியில் இந்திரா காந்தி கலாசார மையம் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் நடைந்திருக்கின்றன. அதேபோல வங்கதேசம் முழுவதும் 4 இந்து கோயில்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் லேசான பாதிப்புகள்தான் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications