பாரீஸ் பருவநிலை உடன்பாடு: வரலாற்று சிறப்புமிக்கது, மனிதத்திற்கு கிடைத்த வெற்றி- இந்தியா
பாரீஸ்: பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்டுள்ள உடன்பாடு சிறப்பான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்று இந்தியா பாராட்டியுள்ளது. மேலும் இந்த உடன்பாடு மூலம் மகாத்மா காந்தியின் கனவு நனவாகும் என்று இந்தியா நம்புகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைப்பது என்று உடன்பாடு எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டை 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் கூறுகையில்,
இது வரலாற்று சிறப்புமிக்க தினம். இது வெறும் உடன்பாடு அல்ல மாறாக 7 பில்லியன் மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை கொண்டு வரும் அத்தியாயம். நாம் இந்த பூமியை நம் முன்னோர்களிடம் இருந்து பெறவில்லை மாறாக நம் வருங்கால சந்ததியினரிடம் இருந்து கடன்பெற்றுள்ளோம் என்று மகாத்மா காந்தியடிகள் தெரிவித்துள்ளார்கள்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சவாலை சமாளித்து நம் சந்ததியினருக்கு சிறப்பான எதிர்காலத்தை அளிப்போம் என்று இன்று வாக்குறுதி அளிக்கிறோம். இந்த உடன்பாட்டை நினைத்து இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்னென்ன செய்ய வேண்டும் என்று உடன்பாட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நாம் ஏற்கனவே துவங்கியுள்ள பயணத்தில் இந்த உடன்பாடு சேர்ந்துள்ளது. நாம் பார்க்காத உலகிற்கும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற காந்தியின் கனவு பாரீஸ் உடன்பாடு மூலம் நனவாகும் என்று இந்தியா நம்புகிறது.
பாரீஸ் உடன்பாடு மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த மாதம் பாரீஸில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்த மாதம் உலகம் ஒன்று சேர்ந்தால் என்னவாகும் என்பதை பாரீஸ் நிரூபித்துள்ளது. இந்த உடன்பாடு மனிதத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.












Click it and Unblock the Notifications