ஹாங்காங்கில் மார்பகத்தால் தாக்கியதாக கூறி பெண் கைது செய்யப்பட்டதை கண்டித்து பிரா போராட்டம்
ஹாங்காங்: ஹாங்காங்கில் மார்பகத்தால் போலீசாரை தாக்கிய பெண் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து பிரா போராட்டம் நடைபெற்றது.
ஹாங்காங்கில் கடந்த மார்ச் மாதம் நடந்த போராட்டம் ஒன்றில் 30 வயது பெண் லாய் இங் கலந்து கொண்டார். அப்போது அவர் தலைமை போலீஸ் இன்ஸ்பெக்டர் சான் கா போவின் கையை தனது மார்பகத்தால் இடித்து தாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போராட்டத்தின்போது போலீஸ் அதிகாரியின் கை தனது மார்பு மீது பட்டதாகவும் அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கின் கைதை கண்டித்து ஹாங்காங்கில் சமூக ஆர்வலர்கள் இன்று நூதன பிரா போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களில் சிலர் சட்டைக்கு மேலும், சிலர் சட்டையின்றியும் பிரா அணிந்திருந்தனர். வான் சாய் மாவட்டத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ஆண் கூறுகையில்,
நாம் உஷாராக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆணுறுப்பால் அல்லது பின்புறத்தால் தாக்கியதாகக் கூறி போலீசார் நம்மை கைது செய்யக்கூடும் என்றார்.