காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நீடிக்கும் வரை.. செங்கடலில் அமைதி இருக்காது! ஹவுதி தலைவர்கள் எச்சரிக்கை
சனா: செங்கடல் பகுதியில் ஹவுதி நடத்தும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவும், பிரிட்டனும் கைகோர்த்து ஏமன் மீது அதிரடி தாக்குதலை தொடுத்துள்ளன. இந்நிலையில், கசா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை நாங்கள் செங்கடலில் தாக்குதலை நடத்திக்கொண்டுதான் இருப்போம் என ஹவுதி தலைவர் அறிவித்துள்ளனர்.
செங்கடல் என்பது கடல் வணிகத்தில் மிக முக்கியமான பாதையாகும். மட்டுமல்லாது ஐரோப்பியாவையும், ஆசியாவையும் இணைக்கும் ஒரு குறுக்கு பாதையாகவும் இது இருக்கிறது. எனவே ஏற்றுமதி, இறக்குமதிக்கு இந்த பாதை சுலபமானதாக இருக்கிறது. இந்த செங்கடல் பகுதி வழியாக ஆசிய - ஐரோப்பியத்தின் 12% வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் சமீப நாட்களாக இந்த கடல் பாதையில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

காரணம் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் போர்தான். பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடுப்பதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்கள்தான். இந்த மோதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸூக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படை களத்தில் இறங்கியிருக்கிறது. இந்த படைகள் செங்கடலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கின்றன. இதற்காக 27 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே இதனை எதிர்த்து நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகள் ஏமன் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியுள்ளன. ஏமன் தலைநகர் சானா, சாதா மற்றும் தாமர் உள்ளிட்ட நகரங்களில் இந்த படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளன. போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் இந்த தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. 10க்கும் அதிகமாக இலக்குகளை அமெரிக்க-பிரிட்டன் கூட்ட படைகள் குறி வைத்திருக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன்,
"அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு நாங்கள் எந்த அளவுக்கு பதிலடி கொடுப்போம் என்பதற்கு இந்த தாக்குதல்கள் ஓர் எடுத்துக்காட்டு. எங்கள் மீதான தாக்குதல் முயற்சிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டனின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அந்நாட்டு அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். மறுபுறம், காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் வரை நாங்கள் செங்கடல் பகுதியில் தாக்குதலை தொடர்வோம் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர். இது குறித்து ஹவுதி தலைமை செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் கூறுகையில்,
"ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த சமீபத்திய தீர்மானம் மேற்கத்திய நாடுகளின் பொய்களால் நிரம்பியுள்ளது. கசா மீது இஸ்ரேல் போரை நீடிக்கும் வரை நாங்கள் செங்கடலில் தாக்குதல் நீடிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications