போட்ஸ்வானாவில் இறந்த 300-க்கும் மேலான யானைகள்.. இறந்த காரணம் என்ன?.. ஆய்வில் புது தகவல்
கபோரோனே: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் இறந்த 350-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்படவில்லை என்றும் அவர் இறந்தது எப்படி என்பது குறித்து ஆய்வாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவில் உலகிலேயே மிக அதிகமான ஆப்பிரிக்க யானைகள் உள்ளன. இங்கு 1.30 லட்சம் யானைகள் உள்ளன. இங்குள்ள ஓகவாங்கோ என்ற பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 350-க்கும் மேற்பட்ட யானைகள் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் பார்க் ரெஸ்யூம் விலங்குகள் தொண்டு அமைப்பின் இயக்குநர் நியால் மெக்கேன் இந்த யானைகளின் உயிரிழப்பை கண்டுபிடித்து உறுதி செய்துள்ளார்.

தரையில்
உயிரிழந்த யானைகளில் பெரும்பாலானவை முகம் தரையில் படும்படி சுருண்டு விழுந்து இறக்கின்றன. மேலும் அவை இறப்பதற்கு முன்னர் ஒரே இடத்தில் வட்டமடிக்கின்றன. இதனால் யானைகளின் நரம்பு மண்டலத்தில் தொற்று ஏதும் தாக்கியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அப்படியே இருந்ததால் அவை வேட்டையாடப்படவில்லை என்பது தெரியவந்தது.

சோம்பல்
மேலும் இந்த யானைகள் இறப்பில் ஆண், பெண், வயது என்ற எந்தவித வித்தியாசமும் இல்லாமல் இருந்ததை அரசு உணர்ந்தது. பல யானைகள் இறப்பதற்கு முன்னர் மிகவும் பலவீனமாகவும் சோம்பலாகவும் மயக்கமாகவும் தோன்றின. சில யானைகள் திசை திருப்புதல், நடப்பதில் கஷ்டம், கால்களில் வீக்கம் ஆகியவை ஏற்பட்டு யானைகள் இறந்தது தெரியவந்தது.

இறப்பு
இந்த நிலையில் யானைகளின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்காக தென்னாப்பிரிக்கா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் தற்போது மேற்கண்ட நாடுகளிலிருந்து சோதனை முடிவுகள் வந்தடைந்தன. அதில் அந்த யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சுத்தன்மையால் இறந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்கள்
இன்று வரை யானை இறந்ததில் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அந்த யானைகள் தேங்கியிருந்த தண்ணீரை குடித்த போது அதிலிருந்த பாக்டீரியா நச்சை உற்பத்தி செய்ததால் யானை இறந்திருக்கலாம் என்றும் பரவலாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications