நெருங்கவே முடியாத இஸ்ரேலை.. ஒரே நாளில் அலறவிட்ட ஹமாஸ் படை! அயர்ன் டோம் வீழ்த்தப்பட்டது எப்படி
உலகிலேயே மிகவும் வலிமையான பாதுகாப்பு அமைப்பைக் கொண்ட இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் படையினரால் எப்படி வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்த முடிந்தது என்பதே இங்குப் பலருக்கும் இருக்கும் சந்தேகம். அது குறித்து நாம் பார்க்கலாம்.
நேற்றைய தினம் காசா உள்ள ஹமாஸ் படை யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேலை நோக்கித் தாக்குதலை நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் அங்கே 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த இஸ்ரேலும் ஸ்தம்பித்துப்போனது.

இவ்வளவு பெரிய தாக்குதலை யாருமே எதிர்பார்க்கவில்லை. இஸ்ரேல் நாட்டில் உள்ள உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான அயர்ன் டோம் அமைப்பு மீண்டும் ஆக்ஷனில் இறங்கியது.
பரபர வீடியோ: இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அயர்ன் டோம் அமைப்பு இஸ்ரேலை நோக்கி வரும் ராக்கெட்டுகளை நடுவானில் அழிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இருப்பினும், தாக்குதல் மிகப் பெரியளவில் இருந்ததால் இஸ்ரேல் நாட்டில் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது.
அயர்ன் டோம் அமைப்பு என்பது தரையில் இருந்து பாயக்கூடிய ஒரு குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பாகும். ராக்கெட் தாக்குதல்கள், மோர்டார்கள், பீரங்கி குண்டுகள் மற்றும் யுஏவிகள் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இது பயன்படும். இந்த அயர்ன் டோம் அமைப்பால் சுமார் 70 கிமீ வரை சென்று ஏவுகணைகளை அழிக்க முடியும். ஏவுகணைகளைக் கண்டறிந்து டிரொக் செய்வது. மிசைல் லாஞ்சர்கள் என பல்வேறு அம்சங்கள் இதில் இருக்கும்.
அயர்ன் டோம் அமைப்பு: கடந்த 2011 முதலே இந்த அயர்ன் டோம் அமைப்பு தான் இஸ்ரேலைக் பாதுகாத்து வருகிறது. 2006 லெபனான் மோதலின் போது, ஹெஸ்பொல்லாவ் அமைப்பு பல ஆயிரம் ஏவுகணைகளை ஏவியதில் இஸ்ரேல் நாட்டில் பலர் கொல்லப்பட்டனர். அதன் பிறகே தனது நாட்டை பாதுகாக்க இஸ்ரேல் சொந்தமாக அயர்ன் டோம் அமைப்பு என்ற இந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது.
இஸ்ரேலை நோக்கி ராக்கெட் ஏவப்படும் போது, ரேடர் டேக்னாலஜி அந்த ராக்கெட் பாதைய கண்டறியும். மேலும், ராக்கெட்டின் பாதை, வேகம் மற்றும் இலக்கைக்குத் துல்லியமாகக் கண்டறிந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு அனுப்பும். அந்த ராக்கெட் மக்கள் வசிக்கும் பகுதி அல்லது முக்கிய பகுதியை நோக்கி இருந்தால், தானாக ஏவுகணைகளை அழிக்க இங்கிருந்து லான்சர்கள் ஏவப்படும். இஸ்ரேலின் இந்த அயன் டோம் அமைப்பு 90 சதவிகித வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது. இதுவரை 2,000 ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளது.
இந்த முறை என்ன நடந்தது: பல ஆண்டுகளாகவே இந்த வான் பாதுகாப்பு அமைப்பை எப்படி முறியடிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள ஹமாஸ் படை தீவிரமாக முயன்றது. இறுதியில் குறுகிய காலத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை ஏவினால் இதை முறியடிக்க முடியும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதன் காரணமாகவே வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகள் ஏவியுள்ளனர்.
ஹமாஸ் கச்சா எண்ணெய்யைப் பயன்படுத்தும் ராக்கெட் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது, இதன் மூலம் அவர்களால் இஸ்ரேலின் மத்திய பகுதியில் இருக்கும் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கூட தாக்க முடியும். மேலும், ஹமாஸ் ஏவும் ராக்கெட்கள் விலையும் குறைவு. இதன் காரணமாகவே இந்தத் தாக்குதலை அவர்களால் வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது.
பிரச்சனை: கடந்த 2021இல் தான் இஸ்ரேல் தனது அயர்ன் டோம் அமைப்பை அப்கிரேட் செய்திருந்தது. அதன் பிறகு மே 2021இல் நடந்த இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் 4,500+ ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அந்த நெருக்கடியான சூழலிலும் 90% சதவீத ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன. இப்படி இத்தனை ஆண்டுகளை இந்த அயர்ன் டோம் அமைப்பு இஸ்ரேலை வெற்றிகரமாகப் பாதுகாத்து வந்தாலும் கூட குறுகிய காலத்தில் அதிகப்படியான ஏவுகணைகள் ஏவப்பட்டதே இந்த முறை பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே இஸ்ரேல் தரப்பில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications