ஆமா.. பேஜர் உள்ளே கொண்டு போய் இஸ்ரேல் குண்டு வைத்தது எப்படி? இதுதான் விஷயம்
பெய்ரூட் : ஹிஸ்புல்லா ஆயுத குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதல் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேஜர் பார்சலை கைப்பற்றி அதன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த சம்பவம் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை குறி வைத்து பேஜர்களை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்ட தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லெபனான் நாட்டில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அவர்களது செல்போன்கள் உள்ளிட்டவை ஒட்டு கேட்பதாக புகார் எழுந்தது. இதை அடுத்து அவர்கள் தங்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக பேஜர்களை பயன்படுத்தி வந்தனர்.
மொபைல் போன் பயன்படுத்தும் போது இஸ்ரேல் உளவு பார்க்கலாம் என்பதன் காரணமாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பேஜர்களை வைத்தே தாக்குதல் நடத்தி இருப்பதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. தெற்கு லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் பல பேஜர்கள் திடீர் திடீரென வெடித்தன. குறிப்பாக ஹிஸ்புல்லா ஆயுத குழுவினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்ததாக கூறப்படுகிறது. பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் வெடித்துச் சிதறின.
லெபனான் மட்டுமல்லாது அந்நாட்டுக்கு வெளியேயும் பேஜர் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் சுமார் 1000 பேஜர்கள் வெடித்து சிதறியாக கூறப்படும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2800க்கு மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சில இடங்களில் வாக்கி டாக்கி மூலமும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே ஹிஸ்புல்லா ஆயுத குழு மீது திட்டமிட்டு பேஜர் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் என குற்றம் சாட்டப்படும் நிலையில் அது தொடர்பாக அந்த நாடு எந்த வித விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான பேஜர்களில் பெரும்பாலானவை தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாட் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தாக்குதலுக்குள்ளான பெரும்பாலான பேஜர்கள் தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் உளவு நிறுவனமான மொடாட் இந்த பார்சல்களை கைப்பற்றி அதன் மூலம் தாக்குதல் நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா மொத்தமாக பேஜர்களை ஆர்டர் செய்ததை அறிந்து கொண்ட மொசாட், அனுப்பப்பட்ட பார்சல்களை இடைமறித்து வெடி பொருட்களை நிரப்பி கொடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த செயல் பல தீவிரவாத இயக்கங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதாவது எந்த ஒரு நிறுவனத்தின் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தலாம் என்பது தவறான முன்னுதாரணம் என கவலை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications