அலைமோதிய அகதிகள் கூட்டத்தால் மூடிய செர்பியாவுடனான எல்லையை மீண்டும் திறந்த ஹங்கேரி
பெல்கிரேட்: அகதிகள் அலை அலையாக வந்ததால் செர்பியாவுடனான எல்லையை ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை மூடியது. இந்நிலையில் எல்லையை மீண்டும் திறந்து வைத்துள்ளது.
சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். சிரியாவில் இருந்து வரும் அகதிகள் ஹங்கேரிக்கு அதிக அளவில் வருகிறார்கள். ஹங்கேரி வழியாக பிற நாடுகளுக்கு செல்கின்றனர்.
அகதிகள் அளவுக்கு அதிகமாக வருவதால் அவர்களை சமாளிக்க முடியாமல் ஹங்கேரி அதிகாரிகள் திணறினர். இதையடுத்து செர்பியாவுடனான தனது எல்லையை ஹங்கேரி கடந்த திங்கட்கிழமை மூடியது.
இந்நிலையில் எல்லையை ஞாயிற்றுக்கிழமை ஹங்கேரி மீண்டும் திறந்து வைத்தது. எல்லையை திறக்கும் நிகழ்ச்சியில் ஹங்கேரி மற்றும் செர்பிய நாட்டு உள்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஹங்கேரி உள்துறை அமைச்சர் சான்டர் பின்டர் கூறுகையில்,
எல்லை வழியாக மக்கள் செல்வதும், பொருட்களை கொண்டு செல்வதும் முக்கியம் என்பதை அறிந்து நல்லெண்ண அடிப்படையில் எல்லையை திறந்துள்ளோம். பிரச்சனை நேரத்தில் பொறுப்பாக நடந்து கொள்ள இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. பொருளாதாரத்தை நம்பி இருப்பதால் எல்லையை திறப்பது முக்கியத்துவம் பெற்றது. எல்லையை தாண்டிய உடனேயே செர்பியாவில் உள்ள அதிகாரிகள் அகதிகளின் விவரங்களை கேட்டறிவார்கள் என்றார்.
எல்லையை 30 நாட்கள் மூடுவதாக ஹங்கேரி அறிவித்தது. இதையடுத்து அகதிகள் க்ரோஷியா வழியாக ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செல்லத் துவங்கியதால் தற்போது எல்லையை ஹங்கேரி திறந்துள்ளது.