215 கி.மீ வேகத்தில் வீசிய பேய்க்காற்று.. டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்ட 'ஹார்வி'
டெக்சாஸ் மாகாணத்தை அச்சுறுத்தி வந்த ஹார்வே புயல் கரையைக் கடந்துள்ளது.
ஆஸ்டின் : அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை அச்சுறுத்தி வந்த ஹார்வே கரையை கடந்துள்ளது, 12 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டிப் போட்ட இந்தப் புயலால் டெக்சாஸ் மாகாணம் உருக்குலைந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் அதாவது சுமார் 130 மைல் வேகத்தில் ஹார்வே புயல் கரையை கடந்துள்ளது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவை தாக்கியுள்ள இந்தக் கடுமையான புயலால் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.
கடல் அலைகள் பல அடி தூரம் எழும்பி ஊருக்குள் புகுந்து வருகிறது. மழைநீர், கடல் நீர் உட்புகுவதால் மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாகிப் போயுள்ளன.

முடக்கம்
ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். உணவு, நீர், கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

விமான சேவைகள் ரத்து
ஹாஸ்டன் மற்றும் கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரையை கடந்ததது
சான் ஜோஸ் தீவில் அரன்சாஸ் துறைமுகம் மற்றம் ஓ கான்னர் துறைமுகம் இடையே மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் புயல் கரையை கடந்துள்ளதாக அமரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் ஹார்வே புயல் காரணமாக மேலும் ஒரு வாரத்திற்கு கடுமையான மழை இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடல்நீர்மட்டம் உயர்வு
டெக்சாஸ் மாகாண மக்களை மிகவும் அச்சுறுத்தி வரும் இந்த ஹார்வே புயல் காரணமாக கடல் நீர்மட்டம் 13 அடி உயரத்திற்கு எழும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ், லூசியானா மற்றும் வடக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து கனமழை பெய்ததினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோரம் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் பேரிடர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்
மேலும் அதிக எண்ணை வளம் மிக்க அமெரிக்காவின் மெக்சிக்கோ வளைகுடா பகுதியில் தற்போது ஹார்வி புயல் காரணமாக கார்பஸ் கிருஸ்டி முதல் டெக்சாஸ் வரையுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டன. அதனால் எண்ணை உற்பத்தியும், இயற்கை எரிவாயு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
|
12 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான புயல் இது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் டெக்சாஸ் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - மெக்சிக்கோ வளைகுடா கடலில் ‘ஹர்லே' எனும் அதிபயங்கர புயல் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications