மேசையில் தான் ஸ்விட்ச் இருக்கிறது.. எல்லாம் காலி ஆகிடுவீங்க.. அணு ஆயுத மிரட்டல் விடுக்கும் கிம் ஜாங்
தன்னுடைய மேடையில் இருக்கும் ஸ்விட்சை அழுத்தினால் அணு ஆயுத தாக்குதல் நடத்த முடியும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் மிரட்டல் விடுத்து இருக்கிறார்.
பியாங்யாங்: அணு ஆயுத போர் குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்து இருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜாங். உலக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இருக்கும் இந்த வாய்க்கால் சண்டை காரணமாக மற்ற உலக நாடுகளும் பெரிய ஆபத்தை சந்திக்க இருக்கிறது. இதுவரை சாதாரணமாக மிரட்டல் விடுத்துக் கொண்டு இருந்த கிம் ஜாங் இந்த முறை பெரிய அணு குண்டு ஒன்றை தன் அறிவிப்பின் மூலம் போட்டு இருக்கிறார்.
அதன்படி தன்னுடைய மேசையில் அணுகுண்டை கட்டுப்படுத்தும் ஸ்விட்ச் இருக்கிறது என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார்.

சண்டை
தொடக்கத்தில் வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் மட்டுமே சண்டை இருந்து வந்தது. இரு நாடுகளும் எப்போது பிரிந்ததோ அப்போது அமெரிக்கா இரண்டிற்கும் இடையில் வந்தது. அன்றில் இருந்து இன்று வரை அமெரிக்காவை தன்னுடைய பல கால எதிரியாக பார்த்துக் கொண்டு இருக்கிறது வடகொரியா. இவர்களின் பாட்ஷா - ஆண்டனி சண்டையில் தென் கொரியா மாணிக்கமாக மாட்டிக் கொண்டு முழித்துக் கொண்டு இருக்கிறது.

சோதனை மேல் சோதனை
2017ம் வருடம் ஏவுகணைகளை வைத்து சோதனை மேல் சோதனை செய்து வடகொரியா எல்லா நாடுகளையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் முக்கியமாக சென்ற வருடம் தான் பெரிய அணு ஆயத சோதனையும் நடத்தியது. இந்த சோதனையை அடுத்து கிம்மை அமெரிக்க அதிபர் டிரம்ப் 'ஏவுகணை குழந்தை' என கிண்டலாக குறிப்பிட்டார்.

புத்தாண்டு
மற்றவர்களுக்கு புத்தாண்டு எப்படி தொடங்கியதோ தெரியவில்லை, வடகொரியா மக்களுக்கு பெரிய பீதியுடனே தொடங்கி இருக்கிறது. நேற்று புத்தாண்டிற்காக தொலைக்காட்சியில் பேசிய கிம் ''நாங்கள் அணு ஆயுத சோதனையில் தன்னிறைவு அடைந்துவிட்டோம். என்னுடைய மேசை மீது ஒரு ஸ்விட்ச் பொருத்தி வைத்து இருக்கிறார்கள். அதை அழுத்தி உலகின் எந்த நாட்டை வேண்டுமானாலும் என்னால் தாக்க முடியும். முக்கியமாக அமெரிக்கவை தாக்க முடியும்'' என்று குறிப்பிட்டார்.

நாங்க யார் தெரியுமா?
மேலும் இந்த வருடம் வடகொரியாவில் நடக்க இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் குறித்தும் அவர் பேசினார். ஆனால் அதிலும் அவர் வில்லங்கமாக சில விஷயங்கள் கூறினார். அதன்படி ''இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மக்களுக்கு எங்கள் பலத்தை காட்டுவோம். உலகத்திற்கு நாங்கள் யார் என்று இனி தெரியும்'' என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications