பின்லேடனை போட்டுத் தள்ளியது நான்தான்.. விரைவில் பகிரங்கப்படுத்துகிறார் அமெரிக்க சீல் வீரர்!
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றது யார் என்று இதுவரை யாருக்குமே தெரியாது. ஆனால் சுட்டுக் கொன்றவரே விரைவில் தன்னை வெளியுலகுக்கு அடையாளம் காட்டப் போகிறார். அமெரிக்காவின் பாக்ஸ் நிறுவன டிவி மூலம் அவர் தன்னை வெளிப்படுத்தவுள்ளார்.
அடுத்த மாதம் பாக்ஸ் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு ஆவணப் படத்தின் மூலம் அந்த அமரிக்க வீரர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவுள்ளதாக பாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை, 2011ம் ஆண்டு அதிகாலையில், அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோ வீரர்கள் அதிரிடியாக வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் பின்லேடன் கொல்லப்பட்டார். பின்னர் பின்லேடனின் உடலோடு அமெரிக்கப் படையினர் அங்கிருந்து புறப்பட்டுப் போய் விட்டனர்.

பாகிஸ்தானுக்குத் தெரியாமலேயே
இந்த தாக்குதல் சம்பவம் பாகிஸ்தான் அரசு, ராணுவத்திற்குக் கூட தெரியாமல் அதிரடியாக நடத்தப்பட்டதாகும்.

கடலில் ஜல சமாதி
சுட்டுக் கொல்லப்பட்ட பின் லேடன் உடலை கடலில் ஜல சமாதி செய்து விட்டதாக அமெரிக்கா பின்னர் தெரிவித்தது. அவரது உடல் முழு மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியது.

யார் அந்த வீரர்
ஆனால் பின்லேடனை சுட்டு வீழ்த்தியது யார் என்ற விவரத்தை மட்டும் அமெரிக்கா வெளியிடவில்லை. மேலும் யாரெல்லாம் அந்த என்கவுண்டர் தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதையும் ரகசியமாக வைத்துள்ளது அமெரிக்கா.

முதல் முறையாக
இந்த நிலையில் அமெரிக்க சீல் படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த, பின்லேடனை நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை முதல் முறையாக வெளிப்படுத்தவுள்ளார்.

பாக்ஸ் டிவியில்
பாக்ஸ் டிவி மூலம் அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். இதுகுறித்து பாக்ஸ் நிறுவன நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "The Man Who Killed Osama Bin Laden" என்ற ஆவணப் படம் 2 பாகமாக நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் ஒளிபரப்பாகும். அப்போது சம்பந்தப்பட்ட வீரர் பின்லேடன் கொல்லப்பட்டதில் தனது பங்கு குறித்து விவரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இதுவரை வெளிவராத தகவல்கள்
அந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளிவராத பல முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளதாம். மேலும் பின்லேடனுடன் நடந்த மோதலின் அந்த பரபரப்பு தருணங்கள் குறித்தும் அந்த வீரர் விரிவாக பேசப் போகிறாராம்.

நடந்தது என்ன
பின்லேடனை நேரில் பார்த்தது, அவருடன் நடந்த மோதல், சாகும் முன்பு பின்லேடன் பேசியது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போகிறாராம் அந்த வீரர்.

மொத்தம் 5 பேர் பலி
அபோதாபாத் தாக்குதலின்போது பின்லேடன் தவிர மேலும் நான்கு பேரும் உயிரிழந்தனர். ஆனால் அமெரிக்கத் தரப்பில் யாரும் காயம் கூட அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications