முதல்ல பொம்மைய வெட்டு.. அப்புறம் பிடறிய வெட்டு.. சிறுவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் கொடுக்கும் பயிற்சி
பாக்தாத்: ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பால் கடத்தப்படும் சிறுவர்களுக்கு, மனிதர்களின் கழுத்தை வெட்டுவதற்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்காக பொம்மைகள் உருவாக்கப்பட்டு அதன் கழுத்தை வெட்டுமாறு சிறுவர்கள் பழக்கப்படுகின்றனர். மனிதர்களை வெட்டும்போதும், சிறுவர்களுக்கு பொம்மை என்ற நினைப்பே மேலோங்கும் என்று உளவியல் ரீதியாக இந்த காய் நகர்த்தலை செய்கின்றனர் தீவிரவாதிகள்.
ஐஎஸ்எஸ் தீவிரவாத அமைப்பால் கடத்தப்பட்ட யாசிதி மதத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் சமீபத்தில் தப்பியோடிவந்தான். அவனிடம் செய்தி நிறுவனம் ஒன்று பேட்டியெடுத்துள்ளது. அதில் சிறுவன் கூறியதாவது: என்னோடு கடத்தப்பட்ட பெண்களை பாலியல் தொழில் அடிமைகளாக விற்றனர். எங்களை போன்ற சிறுவர்களை, ஆயுத பயிற்சிக்கு பயன்படுத்தினர்.
உயிர்களை கொல்லக்கூடாது என்றுதான் எனது தாய், தந்தையர் சொல்லி கொடுத்து வளர்த்தனர். எனது சமூகத்திலும் உயிரை கொல்வது பாவம் என்றே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளோ என்னை போன்ற யாசிதி மதத்தினரை, ஆளை வெட்டும் பயிற்சிக்கு உட்படுத்துகின்றனர்.
பொம்மைகளை நிறுவி, அதன் தலையை வெட்டச் சொல்லி கட்டளையிட்டனர். அதற்கு முன்பாக, வாளை வீசும் பயிற்சி தரப்பட்டது. நான் முதலில் பயந்து கொண்டே வெட்டினேன். பொம்மையின் கழுத்து துண்டாகவில்லை. பிறகு, 2வது வெட்டில் இருந்து சரியாக கழுத்தை பார்த்து வெட்டினேன்.
யாசிதி மதத்தினரை பயமுறுத்தி, முஸ்லிமாக மாற கட்டாயப்படுத்தினர். முஸ்லிம் மதத்தை பற்றியும், அதன் நூல்கள் பற்றியும் சொல்லித்தரப்பட்டது. இவ்வாறு அந்த சிறுவன் கூறியுள்ளான்.