டெக்சாசில் போக்கிரிகளுக்கிடையே துப்பாக்கிச் சண்டை….. 9 பேர் பலி
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே உள்ள வாகோ நகரில் இரண்டு போக்கிரி கும்பல்கள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
அங்குள்ள உணவு விடுதியின் கார் நிறுத்துமிடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் மற்றொரு கும்பலுடன் தகராறில் ஈடுபட்டது.
ஆரம்பத்தில் வாய் வார்த்தையாக தொடங்கிய பிரச்சினை செயின் தாக்குதல், கத்தி குத்து வரை சென்றது. இறுதியில், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதும், பார்க்கிங்கில் நின்றிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு உணவு விடுதிக்குள் ஓடிச் சென்று தஞ்சமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 100 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுடப்பட்டதாக போலீசார் கூறினர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வாகோ நகர போலீசார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீசார் யாரும் காயமடையவில்லை.