லண்டனில் மாணவராக அம்பேத்கர் வசித்த வீடு - மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைப்பு
லண்டன்: லண்டன் நகரில் அம்பேத்கர் வசித்த வீட்டை விலைக்கு வாங்கிய மகாராஷ்ட்டிரா மாநில அரசிடம் அந்த வரலாற்று சிறப்புடைய வீடு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் லண்டனில் ஆராய்ச்சி படிப்பு படித்தபோது 10, கிங் ஹென்றி ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் மாணவராக அவர் அங்கு வசித்து வந்தார். அது 3 மாடிகள் கொண்ட பங்களாவாகும். அதில் 6 படுக்கை அறைகள் உள்ளன. இந்த பங்களா 2 ஆயிரத்து 50 சதுர அடியில் அமைந்துள்ளது.
விற்பனை செய்ய முடிவு:
அந்த வீட்டின் உரிமையாளர் கடந்த ஆண்டு அதை விற்பனை செய்ய உள்ளார் என்ற தகவலை அறிந்த மகாராஷ்டிர மாநில அரசு அந்த வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தது. ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இழுபறி முடிவடைந்து அந்த வீடு 35 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது.
சர்வதேச நினைவு சின்னம்:
இதுதொடர்பான ஒப்பந்தத்தை மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சர் ராஜ்குமார் படோலேவும், வீட்டு உரிமையாளரும் பரிமாறிக் கொண்டனர். இந்தவீடு சர்வதேச நினைவு சின்னமாக மாற்றப்பட்டு, அங்கு இந்திய கலாச்சார மையம் அமையவிருக்கிறது.
பார்வையிட அனுமதி உண்டு:
இதுகுறித்து இங்கிலாந்தில் உள்ள அம்பேத்கர் மற்றும் புத்தமத இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சந்தோஷ் தாஸ், "அம்பேத்கர் வசித்த வீடு, சர்வதேச நினைவகமாக மாற்றப்படும். அது கல்வி மற்றும் கலாச்சார மையமாக திகழும். இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களும், படிக்க வரும் இந்தியர்களும் அதைப் பார்வையிடலாம். ஆனால், பொதுமக்களை அனுமதிப்பதற்கு முன்பு வீட்டில் நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளது" என்று கூறியிருந்தார்.
35 கோடி ரூபாய் மதிப்பிலானது:
இந்த வீட்டை மகாராஷ்டிர அரசுக்கு விற்பனை செய்யும் ஆவணப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து நேற்று முன்தினம் இந்த வீடு மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வீட்டை விலைக்கு வாங்கியதன் மூலமாக வெளிநாட்டில் 35 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக இடம் வைத்துள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை மகாராஷ்டிர அரசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.