இந்தியா வருகையில் நைஜீரிய பெண் எபோலாவுக்கு பலி?
அபுதாபி: புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இந்தியா வருகையில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் அபுதாபியில் எபோலா அறிகுறிகளுடன் மரணம் அடைந்துள்ளார்.
எபோலா வைரஸ் பரவியுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற தனது கணவருடன் இந்தியா கிளம்பினார். அவர் அபுதாபியை அடைந்தபோது அவரின் உடல் நலம் மோசமடைந்தது. அவருக்கு போதிய சிகிச்சை அளித்தும் அவர் உயிர் இழந்தார். அவருக்கு எபோலா காய்ச்சலின் அறிகுறிகள் இருந்துள்ளன.
இதையடுத்து விமானத்தில் அவர் அருகில் அமர்ந்து பயணம் செய்த அவருடைய கணவர் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த 5 டாக்டர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் எபோலா பீதியால் கினியாவுக்கான விமான சேவையை துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் மூடல்
எபோலா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து நைஜீரியாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மூடியே இருக்க நைஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.