மோடி மீண்டும் தாக்குவார்.. இந்தியாவை ஒப்பிடும்போது நாம் ஒன்றுமே இல்லை.. பாகிஸ்தான் எம்பி கதறல்
இஸ்லாமாபாத்: ‛‛இந்தியாவின் ‛ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பாகிஸ்தானை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. இன்னும் ஓராண்டில் மீண்டும் பாகிஸ்தானை, இந்தியா தாக்கும். ஏனென்றால் இந்தியாவின் நவீனமயமாக்கல் நடவடிக்கையை ஒப்பிடும்போது பாகிஸ்தானிடம் இன்று ஒன்றுமே இல்லை'' என்று பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர் ஓமர் அயூப் கான் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு மே 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சண்டையை நிறுத்தியது. இப்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இருப்பினும் இன்னும் ‛ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடியவில்லை. பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தினாலோ, எல்லையில் வாலாட்டினாலோ மீண்டும் உரிய முறையில் தாக்குதல் கொடுக்கப்படும் என்று நம் நாடு தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் எம்பிக்கள் பலரும் பயத்திலேயே இருக்கின்றனர்.
இந்நிைலையில் தான் இந்த பயத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஓமர் அயூப் கான் பேசினார். இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்தவர். பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த ஓமர் அயூப் கான் இந்தியா மீண்டும் பாகிஸ்தானை இன்னும் ஓராண்டுக்குள் தாக்கலாம் என்று அச்சத்தை வெளிப்படுத்தினார். இதுபற்றி ஓமர் அயூப் கான் பேசும்போது கூறியதாவது:
இந்தியாவின் நவீனமயமாக்கல் நடவடிக்கையை ஒப்பிடும்போது பாகிஸ்தானிடம் இன்று ஒன்றுமே இல்லை. பாதுகாப்பு துறைக்கு இந்தியா செய்யும் முதலீடு என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. அடுத்த தலைமுறைக்கான ஏவுகணை முதல் போருக்கான ட்ரோன் சிஸ்டம்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இது நம் நாட்டுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான strategic capabilities இடையேயான இடைவெளி என்பது பெரிய அளவில் அதிகமாக இருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் நிர்வாகம் நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி கண்டுக்கொள்ளாமல் உள்ளது. இது தேசிய பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. நாட்டின் பாதுகாப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அரசு சமாதானம் செய்வதில் இறங்கி உள்ளது. இந்தியாவின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பாகிஸ்தானை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் ராணுவ பட்ஜெட்டில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்று கதறினார்.












Click it and Unblock the Notifications