வாகா எல்லையை முழுநேரமும் திறக்க இந்தியா-பாகிஸ்தான் முடிவு
வாகா: வாகா எல்லைப்பகுதியை வர்த்தகத்திற்காக முழுநேரமும் திறந்துவைத்திருக்க இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் கானும் கலந்துகொண்டனர்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் இடையே 20 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே ஆண்டு முழுவதும் வர்த்தகம் நடத்த அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மிகவும் நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குமாறு பேச்சுவார்த்தையின்போது ஆனந்த் சர்மா வலியுறுத்தியதாகவும் அதனை பாகிஸ்தான் தரப்பில் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆனந்த் சர்மா, இருநாடுகளுக்கிடையே பாரபட்சமின்றி வர்த்தகம் நடைபெற பேச்சுவார்த்தையில் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இருதரப்பிலும் அரசால் பரிந்துரை செய்யப்படும் வங்கிகளுக்கு அனுமதி வழங்க கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறினார்.












Click it and Unblock the Notifications