7 வருடத்தில் சீனாவை முந்தப் போகிறது இந்தியா... எதில் தெரியுமா?
நியூயார்க்: மக்கள் தொகையில் உலகில் முதல் இடம் வகிக்கும் சீனாவை 2022 ஆம் ஆண்டு இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடுகள் கொண்ட பட்டியலில் சீனா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க ஒரு தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் சீனாவில் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஆய்வறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 1.38 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது. 1.31 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கு பின்பு இந்தியாவின் மக்கள் தொகை உயர்ந்து 2030 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனாகவும், 2050ல் 1.7 பில்லியனாகவும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் வகிக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.