ட்ரம்ப் ஆட்சியில் மற்றொரு அட்டகாசம்.. அமெரிக்கவாழ் இந்திய பெண்ணிடம் போலீஸ் கெடுபிடி
வாஷிங்டன்: இந்திய வம்சாவளி அமெரிக்க பெண் போலீசாரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், பாதுகாக்கப்பட்ட நகரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்த நகரங்களில் இதுவரை சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இப்போது அங்கும் நடவடிக்கை தொடரும் என்கிறார் ட்ரம்ப்.
இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்திய பெண் ஒருவர் அங்கு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெல் ஏர் பகுதியை சேர்ந்த, 47 வயதாகும் அரவிந்தா பில்லல்மர்ரி மேரிலேண்ட் பகுதியில் வாக்கிங் சென்றபோது, போலீசாரால் தடுக்கப்பட்டார். நீங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களா என போலீசார் அவரை பார்த்து கேட்டுள்ளனர்.
இதனால் அரவிந்தா பில்லல்மேர்ரி அதிர்ச்சியடைந்தார். இந்தியாவை சேர்ந்த இவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். இவர் சிறு வயது முதலே அமெரிக்காவில்தான் குடியிருந்து வருகிறார். ஆனால் நிறத்தை வைத்து இவ்வாறு ஒரு கேள்வியை அமெரிக்க அதிகாரிகள் முன் வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ஏன் உங்கள் ஐடி கார்டை கொண்டுவரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அதிகாரிகள். இதன்பிறகு தங்கள் கம்ப்யூட்டரில் அரவிந்தா பில்லல்மேர்ரி பெயரை பயன்படுத்தி தேடியுள்ளனர். அப்போதுதான் உண்மை தெரிந்துள்ளது. இதன்பிறகு விடுவித்துள்ளனர். இந்த குடும்பத்தாரின்
இதுகுறித்து பில்லல்மேர்ரி கூறுகையில், நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம்தான். ஆனால் அது குடிமை உரிமைகளை நொறுக்காமல் இருக்க வேண்டும் என்றார். ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் பல இன்னல்களை அமெரிக்க குடிமக்கள் அனுபவிக்க வேண்டிவருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.