அடுத்தபடியாக மலேசியா, சிங்கப்பூர் கிளம்புகிறார் மோடி!
கோலாலம்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூர் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க அந்நாடு வாழ் இந்தியர்கள் மும்முரமான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்திய வம்சாவளியினரும் இந்தியர்களும் அதிகம் உள்ள நாடுகள் இவை.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் இந்தியா- ஏசியான்- கிழக்கு ஆசியா நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.

கோலாலம்பூரில் 22-ந் தேதி மாலை, மலேசிய சர்வதேச கண்காட்சி அரங்கில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பளிக்கின்றனர். அப்போது மலேசியா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். மேலும் கோலாலம்பூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையையும் மோடி திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் நவ.24-ந் தேதியன்று சிங்கப்பூரிலும் இந்தியர்கள் பிரமாண்ட பிரதமர் மோடிக்கு வரவேற்பளிக்க உள்ளனர். இதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்து விட்டு நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி.
அண்மையில் இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடிக்கு வெம்பிளே மைதானத்தில் 60 ஆயிரம் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications