யு.எஸ்.: இந்திய டாக்டரை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த நண்பர்
ஒடிஸா: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பணியாற்றி வந்த பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் கடசாலி அவரது நண்பர் அய்யாசாமி தங்கம் என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் சுரேஷ் கடசாலி. அவர் கடந்த 1993ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். அவர் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஒடிஸா நகரில் சொந்தமாக மருத்துவமனை வைத்து நடத்தி வந்தார். பல சிக்கலான இதய அறுவை சிகிச்சைகளை எளிதில் செய்து புகழ் பெற்றவர் சுரேஷ். நோயாளிகளால் பாராட்டப்பட்ட கைராசியான மருத்துவர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் அவர் மருத்துவமனையில் உள்ள ஒரு அறையில் தங்கியிருக்கும் நோயாளியை சோதனை செய்ய சென்றார். அந்த அறையில் தங்கியிருந்த சுரேஷின் நண்பர் அய்யாசாமி தங்கம்(60) அவரை துப்பாக்கியால் பலமுறை சுட்டார். சுரேஷ் இறந்த உடன் அய்யாசாமி அறைக் கதவை பூட்டிவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அய்யாசாமி எதற்காக சுரேஷை கொலை செய்தார் என்பது தெரியவில்லை. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் லாரா புஷ்ஷின் சொந்த ஊரான ஒடிஸாவில் இந்திய-அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அதிலும் நான்கில் ஒரு மருத்துவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷுக்கு ஆர்த்தி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சஞ்சய் இந்த ஆண்டு தான் மருத்துவக் கல்லூரியிலும், திவ்யா பிசினஸ் ஸ்கூலிலும் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அய்யாசாமிக்கு டாக்டர் சாந்தி என்ற மனைவி உள்ளார். இத்தனை ஆண்டுகளாக ஒன்றாக பழகி வந்த நண்பரை அய்யாசாமி ஏன் கொலை செய்தார் என்று புரியாமல் அவருக்கு தெரிந்தவர்கள் குழம்புகிறார்கள்.