"அந்த" ஒரு கேள்வி? கிட்டத்தட்ட கன்பார்ம் ஆன வேலை போச்சு.. இன்டர்வியூவில் இந்த தப்பை பண்ணாதீங்க
ஒட்டாவா: இந்த காலத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. கஷ்டப்பட்டு இன்டர்வியூ கிடைத்து, அதற்கு ரெடி ஆவார்கள். ஆனால், நேர்காணலிலும் கூட பல சிக்கல்கள் வரலாம். இதற்கிடையே நேர்காணல் இறுதியில் தான் செய்த சிறிய தவறு, தனக்கு கிடைக்கவிருந்த வேலை வாய்ப்பை பறித்துவிட்டதாகக் கனடாவில் வசிக்கும் இந்தியர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக நேர்காணல் என வரும்போது, சரியான பதில்களை அளிப்பதற்காகப் பலரும் தயாராகிறார்கள். ஆனால், நேர்காணல் முடிவில் நிறுவன அதிகாரிகளிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அப்படியொரு சம்பவம் தான் கனடாவில் நடந்துள்ளது.

கனடா
கனடாவில் பிராடக்ட் மேனேஜராக வேலை செய்யும் கரண் கோக்னா, இந்த சம்பவத்தைத் தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு, பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்யும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் அவர் பிராடக்ட் மேனேஜர் பணிக்காக விண்ணப்பித்து இருந்தாராம்.
அனைத்து நேர்காணல் சுற்றுகளையும் வெற்றிகரமாக முடித்த அவரிடம், நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு தனது ஆவணங்களையும் கேட்டதாகக் கூறியுள்ளார். இதனால், வேலை உறுதியாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் பைனல் முடிவு வெளியாகும் முன், நிறுவனத்தின் சிஇஓ தன்னை ஒருமுறை நேரில் சந்திக்க விரும்புவதாக ஹெச்ஆர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு கேள்வி
அதைத் தொடர்ந்தும் சிஇஓ உடனான சந்திப்பு சிறப்பாக நடந்ததாகவும், அப்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்ததாகவும் கரண் கோக்னா கூறியுள்ளார். நேர்காணல் முடிவடையும் தருவாயில், "உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா?" என்று சிஇஓ கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், "உங்கள் நிறுவனம் எதிர்காலத்தில் டூவிலர் வாகன சந்தையிலும் களமிறங்க திட்டமிட்டுள்ளதா?" என்று கரண் கோக்னா கேட்டுள்ளார். ஆனால் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் சிஇஓ, "உங்கள் கருத்து என்ன? நாங்கள் டூவீலர் மார்கெட்டில் நுழைய வேண்டுமா?" என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொதப்பல்
இது குறித்து கரண் கோக்னா தனது பதிவில், "நிறுவனத்தின் கார் பிஸ்னஸ் மார்கெட் குறித்து நான் முழுமையாக ஆய்வு செய்திருந்தேன். ஆனால், டூவீலர் சந்தை குறித்து நான் எதுவும் ரெடியாகவில்லை. அது குறித்து தயாராகவில்லை. இதனால் என்னால் தெளிவான பதிலைத் தர முடியவில்லை. தடுமாற ஆரம்பித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மறுநாள் ஹெச்ஆர் அதிகாரி தொடர்பு கொண்டு, நிறுவனம் வேறு ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதாக என்னிடம் கூறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், நான் கடைசியாகக் கேட்ட ஒரு கேள்வியே தனது வேலை வாய்ப்பை பாதித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
அட்வைஸ்
இந்த அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடத்தைப் பகிர்ந்த கரண் கோக்னா, "இன்டர்வியூ செல்லும்போது நாம் பெரும்பாலும் பதில்களை மட்டுமே தயார் செய்கிறோம். ஆனால், நேர்காணல் செய்பவர்களிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதற்குத் தயாராக இருப்பதில்லை. நீங்கள் கேட்கும் கடைசி கேள்வியே, நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்கள் என்பதற்கான இறுதி மதிப்பீடாக மாறலாம். எனவே ஏன் அந்த கேள்வியை கேட்கிறீர்கள் என்பதையும், அதே கேள்வி உங்களிடமே திரும்ப வந்தால் எப்படி பதிலளிப்பீர்கள் என்பதையும் முன்கூட்டியே யோசித்து தயாராக இருங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications