ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ.. காரணம் இந்திய பருவமழை.. அதிர்ச்சி தகவல்
மெல்போர்ன் : தென்னை மரத்தில் தேள்கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டும் என்ற வாக்கு கேலிக்காக கூறப்படுவதுண்டு. ஆனால் இந்த வாக்கு தற்போது பருவமாற்றத்தையொட்டி உண்மையாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீக்கு இதுவரை மூவர் பலியான நிலையில், இந்த காட்டுத்தீக்கு இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தாமதமான காட்டுத்தீ காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டிய குளிர்ந்த காற்று தடைபட்டதாகவும், அதனால் வெப்பம் அதிகரித்து இந்த அதிபயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் மெல்போர்ன் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோடை வெப்பம் நீடித்ததே காரணம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் உள்ள காடுகளில் அதிபயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் எட்டரை லட்சம் ஹெக்டேர் அளவிலான பகுதிகள் தீயில் பற்றி எரிகின்றன. இந்தக் காட்டுத்தீயில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அபாய அளவை எட்டிய காட்டுத்தீ
இந்தக் காட்டுத்தீயில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் தீயானது அபாய அளவை எட்டியுள்ளது. இந்த காட்டுத்தீயை அணைக்க முடியாமல் அந்நாட்டு தீயணைப்புத்துறையினர் திணறி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ
இந்த காட்டுத்தீக்கு 10 ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிந்ததே காரணம் என்று மெல்போர்ன் பல்கலைகழக விஞ்ஞானி டிரெண்ட் பென்மான் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்து பகுதிகளும் சூழலியலில் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தாமதமாக முடிந்த பருவமழை
இந்தியாவில் கடந்த காலங்களை காட்டிலும் இந்த ஆண்டு அதிகளவில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் ஜூனில் துவங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும் பருவமழை அக்டோபர் மாதம்வரை நீடித்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முடிந்தவுடன் தெற்கு நோக்கி நகரவேண்டிய ஈரக்காற்று, இந்த ஆண்டு தாமதமடைந்துள்ளதாக பென்மான் மேலும் கூறியுள்ளார்.

எமெர்ஜென்சி நிலை அறிவிப்பு
இதுவரை பார்த்திராத வகையில் இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிகளில் வசிப்பவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் எமெர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர்.

சிட்னி, ப்ளூ மவுண்டன் பகுதிகளில் அபாய அளவு
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் சிட்னி, ப்ளூ மவுண்டன், மத்திய கடற்பகுதிகளில் காட்டுத்தீ அபாய அளவை எட்டியுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications