யு.கே.: கொள்ளையர்களை தடுத்த இந்திய வம்சாவளி வியாபாரி சுட்டுக் கொலை
லண்டன்: இங்கிலாந்தில் தனது கடையை கொள்ளையடிக்க முயன்ற 2 திருடர்களை தடுத்த இந்திய வம்சாவளி வியாபாரி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பகுதியில் இருக்கும் ஸ்வின்டனில் வசித்து வந்தவர் பிரகரத் சிங்(35). அவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். நண்பர்களால் சார்லி என்று அழைக்கப்பட்ட அவர் ஓபன்ஷா என்ற பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் கடையை பூட்டிவிட்டு அன்றைய நாள் வசூல் பணத்துடன் வீட்டுக்கு கிளம்பினார்.
அப்போது ஆயுதம் ஏந்திய 2 கொள்ளையர்கள் அவரது கடையை கொள்ளையடிக்க வந்தனர். இதை பார்த்த சிங் அவர்களை தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் சிங்கை மார்பு மற்று வயிறு பகுதியில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர் வைத்திருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு காரில் தப்பியோடிவிட்டனர்.
குண்டடிபட்ட சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவத்தால் சிங்கின் குடும்பத்தார் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.