சிங்கப்பூரில் குழந்தைகள் முன்பு மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 10 மாதம் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனது மனைவியை கத்தியால் குத்திய 29 வயது இந்திய வம்சாவளி நபருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வசித்து வந்தவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் டேவிட் நரசிம்மலு(29). அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவி வசந்த குமாரி(30), 7 மற்றும் 5 வயதான மகன்களுடன் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.
கடைக்கு செல்லும் வழியில் சுரேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தனது பையில் இருந்த ஸ்விஸ் கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் குத்தினார். குழந்தைகள் கண் முன்பு மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவர் டாக்சியில் தப்பியோடிவிட்டார்.
போலீசாருக்கு வசந்தா தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். சுரேஷும், வசந்த குமாரியும் விவாகரத்து பெற உள்ளனர். வசந்த குமாரியை குத்திய வழக்கில் சுரேஷுக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தில் சுரேஷின் வழக்கறிஞர் கூறுகையில்,
சுரேஷ் அவரது மனைவியை வேண்டும் என்றே கத்தியால் குத்தவில்லை. வசந்தா தான் வாக்குவாதத்தை துவங்கினார். வசந்தா வேறு ஒரு ஆணுக்காக தனது கணவரை ஏமாற்றிச் சென்றதை அவரால் தாங்க முடியவில்லை. மேலும் வசந்தா தன்னுடன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றதுடன் சுரேஷை அவர்களை பார்க்கவிடுவது இல்லை என்றார்.