சீனாவில் மருத்துவக் கல்வி கற்றுவந்த இந்திய மாணவர் சாலை விபத்தில் பலி!
பீஜிங்: சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா அருகேயுள்ள சஹரா கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் குமார். 22 வயதான இவர் சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள டையான் நகரில் இருக்கும் டைஷான் மருத்துவக் கல்லூரியில் டாக்டருக்கு படித்துவந்தார்.
சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த இரு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கமல், விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக இந்தியாவில் உள்ள அவரது பெற்றோருக்கு முதலில் தகவல் கிடைத்தது.
இதை அறிந்த அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், சிகிச்சை பலனின்றி கமல் இறந்துவிட்டதாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் கமலின் உடல் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் கமலின் இரு இந்திய நண்பர்களும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications