தாய்லாந்தில் 2 இந்திய டூரிஸ்டுகளிடம் ரூ.62,000, செல்போன், கிரெடிட் கார்டுகள் கொள்ளை
பாங்காக்: தாய்லாந்தில் 2 இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் கிருஷ்ணன்(36) மற்றும் அவரது நண்பர் காதர் பாஷா(40) ஆகியோர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள பட்டயா கடற்கரையில் அவர்கள் நடந்து சென்றபோது ஒரு தாய்லாந்து பெண் அவர்களை அணுகி பணம் கொடுத்தால் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு விலையை நிர்ணயித்த பிறகு கார்த்திகேயன், பாஷா ஆகியோரை அப்பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அதற்குள் ஏறுமாறு தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் ஏறியவுடன் அவர்களை சற்றுநேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு அப்பெண் தனது நண்பரை அழைத்துள்ளார். அப்போது தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்கள் வந்து கார்த்திகேயன் மற்றும் பாஷாவை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாஷாவை கண்டுபிடித்து தருமாறு உடலில் காயங்களுடன் கார்த்திகேயன் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு பெண் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.